மசோதாக்களை ஆளுநர் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பெரும்​பான்மை உறுப்​பினர்​களால் சட்​டப்​பேர​வை​யில் ஏகமன​தாக நிறைவேற்​றப்​படும் மசோ​தாக்​களை ஆளுநர் காரணமில்​லாமல் ஆண்​டுக்​கணக்​கில் கிடப்​பில் போட்​டால் ஜனநாயகம் கேலிக்​கூத்​தாகி விடும் என உச்ச நீதி​மன்ற அரசி​யல் சாசன அமர்வு கருத்து தெரி​வித்​துள்​ளது.

மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க ஆளுநர் மற்​றும் குடியரசுத் தலை​வருக்கு உச்ச நீதி​மன்​றம் கால நிர்​ண​யம் செய்த விவ​காரத்​தில், குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று தொடர்ச்​சி​யாக மூன்​றாவது நாளாக நடந்​தது.

அப்​போது மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘ஒரு அரசி​யல் சாசன அமைப்பு மற்​றொரு அரசி​யல் சாசன அதி​காரம் படைத்த அமைப்​புக்கு கால நிர்​ண​யம் செய்ய முடி​யாது என்​பதை உச்ச நீதி​மன்​றம் ராமசந்​திர ராவ் வழக்​கில் ஏற்​கெனவே தெளிவுபடு்த்​தி​உள்​ளது. ஒரு​வேளை உச்ச நீதி​மன்​றம் காலநிர்​ண​யம் செய்​வ​தாக இருந்​தா​லும் அதை உத்​தர​வாக அல்​லாமல் பரிந்​துரை​யாக செய்​திருக்க வேண்​டும். சட்ட மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கும் விவ​காரத்​தில் பல்​வேறு அளவு​கோல்​கள், காரணங்​கள், இடர்​பாடு​கள் உள்​ளன. அனைத்​தை​யும் கருத்​தில் கொள்ள வேண்​டும்’’ என்​றார்.

அதற்கு நீதிப​தி​கள், ‘‘அதற்​காக தொடர்ந்து எந்த காரண​மும் தெரிவிக்​காமல் கிடப்​பில் போட்​டால் அத்​துடன் எல்​லாம் முடிந்து விடு​மா, அதற்கு தீர்வு காண வேண்​டா​மா’’ என்​றனர். பதி​லுக்கு துஷார் மேத்​தா, ‘‘அரசி​யல் சாசன சட்​டத்​தில் இவ்​வாறு எந்த காலநிர்​ணய​மும் செய்​யப்​ப​டாத போது உச்ச நீதி​மன்​றம் அதில் குறுக்​கிட்டு கால நிர்​ண​யம் செய்ய முடி​யாது. அது நாடாளு​மன்​றத்​தி்ன் பணி. அரசி​யல் ரீதியி​லான தீர்வு தான் சரி​யாக இருக்​கும். நாட்​டில் உள்ள அனைத்து பிரச்​சினை​களுக்​கும் உச்ச நீதி​மன்​றத்​தில் தீர்வு கிடைத்​து​வி​டாது. அத்​தகைய பிரச்​சினை​களுக்கு அரசி​யல் சாசன சட்ட ரீதி​யாகவே தீர்வு காண முடி​யும்’’ என்​றார்.

அப்​போது தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், ‘‘அந்த அரசி​யல் சாசன சட்​டத்​தின் தலை​மைப் பாது​காவலரே உச்ச நீதி​மன்​றம் தான். குடியரசுத் தலை​வர், ஆளுநர், முதல்​வர் என அரசி​யல் சாசன பதவி வகிக்​கும் ஒரு​வர் காரணமின்றி தனது கடமையை செய்ய மறுத்​தால் உச்ச நீதி​மன்​ற​மும், உயர் நீதி​மன்​றங்​களும் கைகட்​டிக்​கொண்டு வேடிக்​கைப்பார்க்க வேண்​டும் எனக்​கூற முடி​யு​மா? நீதித்​துறை அமைப்​பு​களுக்கு அதி​காரம் இல்​லை​யா? தவறு நடந்​தால் அதற்கு தீர்வு காண வேண்​டா​மா? கால​வரையற்ற அதி​காரம் ஆளுநருக்கு இருப்​ப​தாகக் கூறி​னால் முறை​யாக மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சட்​டப்​பேர​வைக்கு என்ன அதி​காரம் உள்​ளது’’ என்​றார்.

அதற்கு துஷார் மேத்​தா, சட்​ட​மியற்​றும் பணியை உச்ச நீதி​மன்​றம் மேற்​கொள்ள முடி​யாது. சட்​டப்​பேர​வை, அரசு நிர்​வாகம், நீதித்​துறை என ஒவ்​வொரு அமைப்​பு​களுக்​கும் ஒவ்​வொரு வித​மான பணி​கள் உள்​ளன. இவையனைத்​துமே அரசி​யலமைப்பு சட்​டத்​தின் பாது​காவலர்​களே. குடியரசுத் தலை​வரும், ஆளுநர்​களும் இப்​படித்​தான் செய​லாற்ற வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட முடி​யாது. மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கும் இவர்​களின்
அதி​காரங்​களை நீதி​மன்ற பரிசோதனைக்கு உட்​படுத்த முடி​யாது. இதற்கு ஒரே தீர்வு அரசி​யல் சாசனத்தை திருத்​து​வது​தான். அது​வரை இந்த பிரச்​னைக்கு அரசி​யல் ரீதி​யாகத்​தான் தீர்வு காண வேண்​டும். ஆனால் உச்ச நீதி​மன்​றம் தனது சிறப்பு அதி​காரத்தை பயன்​படுத்தி அரசி​யல் சாசனத்தை திருத்த முடி​யாது, என்​றார்.

அதையடுத்து நீதிப​தி​கள், ‘‘மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்கும் விவ​காரத்தை நீதி​மன்றவிசா​ரணைக்கு உட்​படுத்த முடி​யும். பெரும்​பான்மை உறுப்​பினர்​களால் சட்​டப்​பேர​வை​யில் ஏகமன​தாக நிறைவேற்​றப்​படும் மசோ​தாக்​களை ஆளுநர் காரணமில்​லாமல் ஆண்​டுக்​கணக்​கில் கிடப்​பில் போட்​டால் ஜனநாயகம் கேலிக்​கூத்​தாகி விடும். இந்த விஷ​யத்​தில் தமிழகம் மட்​டுமல்​லாது வேறு சில மாநிலங்​களும் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​கு​களைத்​ தொடர்ந்​துள்​ளன’’ எனக்​கூறி இந்​த வழக்​கு வி​சா​ரணை​யை வரும்​ ஆக.26-க்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.