அபுதாபி,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும். 2016-ம் ஆண்டில் இருந்து ஆசிய கோப்பை போட்டிக்கான வடிவம், உலகக்கோப்பை அடிப்படையில் மாற்றப்பட்டது. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் , ஆசிய கோப்பை தொடங்க உள்ள நிலையில் 8 அணிகளின் கேப்டன்களும் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.