புவனேஸ்வரம்,
ஆந்திராவை சேர்ந்த பி.லட்சுமி என்ற 86 வயது மூதாட்டி, ஒடிசாவில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு சென்று மருமகனுடன் வசித்து வந்தார். கஞ்சம் மாவட்டம் போலசரா பகுதியில் தங்கியிருந்த அந்த மூதாட்டி, சம்பவத்தன்று கண்களைத் திறக்கவில்லை. மூச்சுவிடும் அறிகுறியும் தெரியவில்லை.
இதனால் அவர் இயற்கையாக மரணம் அடைந்துவிட்டதாக கருதி, இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடந்தன. அவரை வாகனத்தில் ஏற்றி மயானத்துக்கு கொண்டு சென்று எரியூட்டும் ஏற்பாடுகளை செய்தனர். அப்போது, மயான பாதுகாவலர்கள், மூதாட்டியின் உடலை பார்வையிட்டபோது அவர் மூச்சுவிடுவதை கவனித்து அதிர்ந்து போனார்கள். உடனே ஒரு ஆம்புலன்சை வரவழைத்து மூதாட்டியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கவலைக்கிடமான நிலையில் இருக்கும் மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.