சண்டிகர்,
அரியானா மாநிலம் குருகிராம் நகரைச் சேர்ந்த 17 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு 3 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் 2 ஆண்கள் அறிமுகமாகியுள்ளனர். அவர்கள் தொடர்ந்து நட்பாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் மாணவி டியூசன் வகுப்பிற்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த மாணவியின் பெற்றோர் டியூசன் ஆசிரியரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, மாணவி வகுப்பிற்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து சுமார் 8 மணிக்கு மாணவி அழுதபடி வீடு திரும்பினார். அவரிடம் விசாரித்தபோது, இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு பழக்கமான லக்ஷயா மற்றும் அன்கித் ஆகிய 2 பேர், தன்னை டியூசன் வகுப்பிற்கு அழைத்துச் செல்வதாக கூறி காரில் ஏற்றிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.
குற்றவாளிகள் இருவரும் மாணவியை வன்கொடுமை செய்துவிட்டு, மீண்டும் அவரை காரில் ஏற்றி அவரது வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான லக்ஷயா மற்றும் அன்கித் ஆகிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.