இது மழைக்காலம். மழை மண்ணை நனைத்ததுமே, ‘சூடா ஏதாச்சும் அருந்தலாமே’ என மனம் தேடும். அவை, மழைக்கால நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதாகவும் அமைந்துவிடும். அப்படிப்பட்ட சில நீர்த்துவமான ஹெல்த் ரெசிப்பிகளை இங்கே வழங்கியிருக்கிறார், சமையற்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.
1. வாழைப்பூ சீரகக் கஞ்சி

தேவையானவை: வாழைப்பூ இதழ் – 15, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், சீரகச்சம்பா அரிசி – கால் கப், பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் – 6 (பொடியாக நறுக்கவும்), தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை – சிறிது, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: வாழைப்பூவை காம்பு நீக்கி, நறுக்கி மோரில் போடவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, சீரகம், இஞ்சித் துருவல், வாழைப்பூ (மோரிலிருந்து எடுத்துப் பிழிந்து) சேர்த்து வதக்கி, அரிசி, பாசிப்பருப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் இந்தக் கஞ்சியைச் சுடச்சுடக் குடிக்கலாம்.
2. சுக்கு சூப்

தேவையானவை: சுக்குப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாக உடைத்தது), தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று (நறுக்கவும்), துளசி, புதினா இலை – சிறிது, சோம்பு – அரை டீஸ்பூன், வெள்ளைப் பூசணி – ஒரு துண்டு (2 இஞ்ச் அளவு), வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: அலங்கரிப்பதற்கு சில புதினா இலைகளை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். பிரஷர் பானில் வெண்ணெயை சூடாக்கி கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் (உப்பு நீங்கலாக) சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு விசில் வரும்வரை வேகவிடவும்.
பிரஷர் நீங்கியதும் பெரிய கண் உள்ள வடிகட்டியால் வடிகட்டி, சூப் கிண்ணத்தில் ஊற்றி, புதினா சேர்த்துப் பரிமாறவும். விரும்பினால் வறுத்த ரொட்டி துண்டுகளை மேலே தூவிக்கொள்ளலாம்.
3. மசாலா டீ

தேவையானவை: பால், தண்ணீர் – தலா ஒரு டம்ளர், ஏலக்காய் – 2, சுக்குப்பொடி – அரை டீஸ்பூன், துளசி இலை – 4, தோல் நீக்கி தட்டிய இஞ்சி – சிறிது, டீத்தூள் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – தேவைக்கேற்ப.
செய்முறை: பாலைக் காய்ச்சவும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை வைத்து ஒரு கொதி வந்தவுடன் தட்டிய ஏலக்காய் மற்றும் இஞ்சி, சுக்குப்பொடி, துளசி இலை, டீத்தூள், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீரில் அனைத்துப் பொருட்களின் சாறும் இறங்கி மணம் வரும் சமயம் அடுப்பை அணைக்கவும். பிறகு வடிகட்டி பாலில் சேர்த்து, தேவையெனில் சிறிது சர்க்கரை கலந்து பரிமாறவும்.
4. இஞ்சி – பூண்டு – மிளகு ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் – ஒன்றரை கப், பூண்டு – 6 பல், மிளகு – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – அலங்கரிக்க, இஞ்சி – 2 அங்குலத் துண்டு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், கறி வேப்பிலை – சிறிது, நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: இஞ்சி, பூண்டு மற்றும் மிளகை அம்மியில் நசுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து, சீரகம், நசுக்கிய இஞ்சி, பூண்டு, மிளகைச் சேர்த்து வதக்கி, பருப்புத் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். பிறகு, பெருங்காயத்தூள் தூவி ஒரு கொதிவிட்டு இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். கொத்தமல்லித்தழை தூவவும். இதை அப்படியே பருகலாம். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.
5. கற்பூரவல்லி கஷாயம்

தேவையானவை: கற்பூரவல்லி இலை – 5, துளசி இலை – 10, இஞ்சி – அரை அங்குலத் துண்டு (கழுவி, தோல் நீக்கி தட்டியது), சுக்குப் பொடி, ஓமம் – தலா அரை டீஸ்பூன், பனங்கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன் (பொடித்தது).
செய்முறை: பனங்கற்கண்டு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து சூடாக்கி, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அவை ஒரு டம்ளராக வற்றியதும் இறக்கி வடிகட்டவும். இத்துடன் பொடித்த பனங்கற்கண்டு சேர்த்து கரைந்ததும் குடிக்கவும். நல்ல மணத்துடன் தொண்டைக்கு இதமாக இருக்கும்.