சென்னை: வங்கக் கடலில் உருவாகும் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் 215 நிவாரண முகாம்கள் தயாராக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது, மேலும் வலுவடைந்து அக்.27-ம் தேதி புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, புறநகர் மாவட்டங்களில் 26-ம் தேதி கனமழையும், 27-ம் தேதி மிக கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பருவமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அளிக்கும் நோக்கில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 215 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. அவற்றில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 மைய சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
ஏற்கெனவே பெய்த மழையால் பாதிக்கப்பட்ட 4 லட்சத்து 400 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 1,436 மோட்டார் பம்புகளும், 100 எச்பி திறன் கொண்ட 150 மோட்டார் பம்புகளும், மரங்களை அகற்ற 457 அறுவை இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அக்.17 முதல் 22-ம் தேதி வரை 31 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
மாநகராட்சி தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணுக்கும், சென்னை குடிநீர் வாரிய புகார்களை 1916 என்ற எண்ணுக்கும் தெரிவித்தால், தேவையான உதவிகளை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் 22 ஆயிரம் பேரும், சென்னை குடிநீர் வாரியத்தில் 2,149 களப்பணியாளர்களும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.