தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்த பிரான்ஸ் எம்.பி. கரோனா தொற்றால் மரணம்

பிரான்ஸில் கரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்த நாடாளுமன்ற எம்.பி. ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரான்ஸில், கரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செயல்படுவது சந்தேகத்துக்குரியது என்று தடுப்பூசிக்கு எதிராகத் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஸ் எவ்ரார்டு (வலசாரி கட்சியைச் சேர்ந்தவர்) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 76.

மறைந்த ஜோஸ் எவ்ரார்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அவரது மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜோஸ் எவ்ரார்டு மறைவு, தடுப்பூசிக்கு எதிராக பிரான்ஸில் பிரச்சாரம் செய்தவர்களுக்கு பதிலாக அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

உலக அளவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு 2021 டிசம்பர் 27-ம் தேதி முதல் 2022 ஜனவரி 2-ம் தேதி வரையிலான உலக அளவிலான கரோனா தொற்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த வாரத்தில் உலக அளவில் கரோனா பரவல் திடீரென 71 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.