அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் – இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை சிவாஜி பூங்காவில் பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் உடல் 21 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த, பாலிவுட் பின்னணி பாடகி
லதா மங்கேஷ்கர்
(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் மூலம் சுவாசித்து வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இன்று காலை 8:12 மணியளவில் லதா மங்கேஷ்கர் காலமானார். பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததால், அவர் காலமானதாக சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அவரது உடல் பிற்பகல் 12:30 மணிக்கு வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர், ஊர்வலமாக சிவாஜி பூங்காவிற்கு கொண்டு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். லதா மங்கேஷ்கர் உடலுக்கு முப்படைகள் மற்றும் மகாராஷ்டிர காவல் துறையினர் இறுதி மரியாதை செய்தனர். இதன் பின்னர் முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில், மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பாலிவுட் நடிகர் ஷாருக், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சிண் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.