சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ் – வெளியானது செம அறிவிப்பு!

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 12 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தினமும், 15 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், பத்தினம்திட்டா மாவட்டத்தில், உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்துச் செல்வர். தற்போது கொரோனா காலக் கட்டம் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக பக்தர்களின் வருகை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை, மாசி மாத பூஜைகளுக்காக வரும் 12 ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அன்று விசேஷ பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 13 ஆம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார்.

கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். 17 ஆம் தேதி இரவு வரை நடை திறந்திருக்கும். தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை முடிவு ‘நெகடிவ்’ சான்றிதழ் மற்றும் முன்பதிவு கூப்பனுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு வர வேண்டும் என, சபரிமலை தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.