சித்து கனவை காலில் போட்டு மிதித்த காங்கிரஸ்.. சென்னிக்கு ஏன் பச்சைக் கொடி?

முதல்வர் பதவிக்காக ஆவலோடு காத்திருந்தார்
நவ்ஜோத் சிங் சித்து
. ஆனால் அவரை ஓரம் தள்ளி விட்டு விட்டு தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சென்னியையே முதல்வர் வேட்பாளராக
காங்கிரஸ்
கட்சி அறிவித்துள்ளது சித்து ஆதரவாளர்களை அதிர வைத்துள்ளது.

பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் கலக்கி வருகின்றன. இந்த வரிசையில் காங்கிரஸ் சார்பில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது.

தற்போதைய முதல்வர் சென்னியையே காங்கிரஸ் மேலிடம் முதல்வராக அறிவிக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுக்கோ தன்னையே முதல்வராக அறிவிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. இதனால்தான் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கூட முதல்வர் வேட்பாளரை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும், கட்சி மேலிடம் அல்ல என்று பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

ஆனால் சித்து சற்றும் எதிர்பாராத வகையில் சென்னியையே காங்கிரஸ் மேலிடம் முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. இது சித்து தரப்பை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சித்துவின் முதல்வர் பதவி கனவை காங்கிரஸ் மேலிடம் காலில் போட்டு நசுக்கி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் முதல்வர் வேட்பாளர் தேர்வு குறித்து ராகுல் காந்தி தெள்ளத் தெளிவாக சில கருத்துக்களை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டிவி விவாதங்களிலோ, மீடியாக்களிலோ தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை. பல வருட போராட்டங்களுக்குப் பிறகுதான் ஒரு தலைவர் உருவாகிறார். அப்படிப்பட்ட தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் ஒரு போதும் பஞ்சமே இல்லை.

அரசியல் என்பது ஏதோ கச்சேரி போன்றதல்ல. ஒரு அரசியல் தலைவர் என்றால் அவர் மக்களுக்காக போராட வேண்டும், சவால்களை சந்தித்து கரையேற வேண்டும். பல தலைவர்கள் இதுபோன்ற போராட்டங்களுக்குப் பின்னரே தலைவர்களாகியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி கூட பல விதமான போராட்டங்களுக்குப் பிறகுதான் அப்பதவிக்கு வந்தார். பஞ்சாப், சென்னி மற்றும் சித்துவின் ரத்தம் கலந்த மண் என்றார் ராகுல் காந்தி.

அதேசமயம், சென்னியை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்ய சில காரணங்கள் உள்ளன.

கட்சியினர் மத்தியிலும் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் சித்துவை விட சென்னிக்கே அதிக ஆதரவு உள்ளது. இதை காங்கிரஸ் மேலிடம் உணர்ந்துதான் அவரையே முதல்வர் வேட்பாளராக்க தீர்மானித்துள்ளது.

சென்னி பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் முதல்வர் என்ற பெருமை படைத்தவர். ஜாட் மற்றும் சீக்கிய சமூகத்தினர் ஆதிக்கம் நிறைந்த பஞ்சாப் அரசியலில் தலித் ஒருவர் முதல்வரானது மிகப் பெரிய ஆச்சரியமான சம்பவம். அந்த வாக்கு வங்கியை பலப்படுத்தும் வகையிலும், தக்க வைக்கும் வகையிலுமே சென்னியை முதல்வராக தொடரச் செய்ய காங்கிரஸ் விரும்புகிறது.

அடுத்து சென்னியின் குணம். மிகவும் எளிமையானவர் அவர். யாராலும் எளிதில் அணுக முடியும். குடும்பத்தினர் போல அனைவருடனும் பேசுவார், பழகுவார். அடித்தட்டு மக்களின் நிலைமை அவருக்கு நன்றாக தெரியும். வறுமை, பட்டினி குறித்து நன்கு அறிந்தவர், அனுபவம் கொண்டவர். பந்தா பண்ணத் தெரியாதவர். இதுவும் கூட அவருக்கு சாதகமாக அமைந்தது.

ஊழல்வாதிகளுக்கு எதிரான போக்கைக் கொண்டவர். ஊழல் வாதிகளுக்கு எதிராக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தவர். வளர்ச்சி மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டவர். இப்படி பல சாதகமான அம்சங்கள் சென்னியின் பக்கம் இருந்ததால்தான் அவரை முதல்வர் வேட்பாளராக்கியுள்ளது காங்கிரஸ் மேலிடம்.

ஆரம்பத்திலிருந்தே பாஜகவை பெரிய எதிர்ப்பாக சென்னி எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக ஆம் ஆத்மி கட்சியைத்தான் அவர் கடுமையாக எதிர்த்து வருகிறார். அமரீந்தர் சிங்கையம் ஒரு பொருட்டாக அவர் மதிப்பதில்லை. இப்படி நுட்பத்துடன் அவர் செயல்பட்டு வருவதும் கட்சி மேலிடத்தைக் கவர்ந்துள்ளது. சித்துவுடன் ஒப்பிடுகையில் சென்னி பல படி மேலே நிற்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ராகுல் காந்தியும் கூட சென்னியை சரியாக தேர்வு செய்ய வைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.