ஸ்டார்ட் அப் உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி, பதில் அளித்து பேசினார். பிரதமர் மோடி தனது உரையில், “சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் போது அதனை எங்கே, கொண்டு செல்லவிருக்கிறோம், எப்படிக் கொண்டு செல்லவிருக்கிறோம் என்பதை சிந்திப்பதற்கு இது மிகவும் முக்கியமான நேரம். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு கூட்டான பங்களிப்பும், கூட்டான உரிமை ஏற்பும் அவசியம்.

உலகம் இன்னமும் கரோனா பெருந்தொற்றுடன் போராடி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இது போன்ற சவால் எதையும் மனிதகுலம் கண்டதில்லை. இந்திய மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமல்ல மற்றவர்களையும் பாதுகாப்பதற்குத்தான். உலகளவில் உள்ள ஏராளமான தடுப்பூசிக்கு எதிரான இயக்கங்களுக்கு இடையே இந்த செயல் போற்றுதலுக்குரியது. பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து மக்கள் கேள்விகளை எழுப்பினார்கள். ஆனால் 80 கோடி பேர் விலையில்லாமல் ரேஷன் பெறுவதை இந்தியா உறுதி செய்தது. ஏழைகளுக்கு சாதனை எண்ணிக்கையில் வீடுகள் கட்டுவதையும், இந்த வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் தருவதையும், அது உறுதி செய்தது.

இந்தப் பெருந்தொற்று காலத்தில் 5 கோடி மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. நமது முற்போக்கான அணுகுமுறை காரணமாக இந்தப் பெருந்தொற்று காலத்தில் நமது விவசாயிகள் ஏராளமான உணவு தானியங்களை அறுவடை செய்திருக்கிறார்கள். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பான பல திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். இத்தகைய சவாலான காலங்களில் இவை அனைத்தும் வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளன. இந்தப் பெருந்தொற்று காலத்தில், நமது இளைஞர்கள், விளையாட்டுக்களில் பெரும் முயற்சி செய்து நாட்டிற்குப் புகழ் சேர்த்துள்ளனர். இந்திய இளைஞர்கள் தங்களின் புதிய தொழில்களைத் தொடங்கி உலகின் மூன்று முதல் நிலை புதிய தொழில் தொடங்கும் இடங்களில் ஒன்றாக இந்தியாவை மாற்றியுள்ளனர்.

பங்கேற்பாளர்களின் கருத்தரங்கு 26ஆக இருந்தாலும், அல்லது ஜி-20 தொடர்பான விஷயமாக இருந்தாலும் 150க்கும் அதிகமான நாடுகளுக்கு மருந்துப்பொருட்கள் ஏற்றுமதியாக இருந்தாலும், இந்தப் பெருந்தொற்று காலத்தில், இந்தியா மிக முக்கியமான தலைமைத்துவத்தை அளித்துள்ளது என்பதையும் ஒட்டுமொத்த உலகமும் இது பற்றி விவாதிக்கிறது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தப் பெருந்தொற்று காலத்தில் எம்எஸ்எம்இ மற்றும் வேளாண்துறை மீது நாங்கள் கவனம் செலுத்தியிருக்கிறோம்.

வேலைவாய்ப்புக் குறித்த புள்ளி விவரங்களை அளித்த போது 2021-ஆம் ஆண்டு ஒரு கோடியே இருபது லட்சம் பேர் தாங்களாகவே இபிஎஃப்ஓ இணையப் பக்கத்தில் பதிவு செய்துகொண்டிருப்பதை இபிஎஃப்ஓ சம்பளப்பட்டியல் தரவுகள் காட்டுகின்றன. இவை அனைத்தும் முறைசார்ந்த வேலைகள். இவற்றில் சுமார் 60 முதல் 65 லட்சம் வரையிலான வேலையில் சேர்ந்தவர்கள் 18 மற்றும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இதன் பொருள் இந்த வேலை இவர்கள் முதல் முறையாகப் பெற்றது என்பதாகும். மேலும், எங்களால் இயன்றவரை பணவீக்கத்தை நாங்கள் கட்டுப்படுத்தியிருக்கிறோம். இதனை மற்ற பொருளாதாரங்களோடு ஒப்பிடுகையில், சுமாரான பணவீக்கத்துடன் அதிகபட்ச வளர்ச்சியைக் கொண்டிருக்கும். பெரிய பொருளாதாரம் இந்தியா மட்டுமே என்று நாங்கள் கூறமுடியும்.

நாங்கள் எந்தப் பக்கத்தில் இருக்கிறோம் என்பதைக் கருதாமல் மக்கள் அனைவருக்காகவும் பாடுபட்டிருக்கிறோம். எதிர்க்கட்சி என்பதன் பொருள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பணியை நிறுத்துவது என்ற மனப்போக்கு தவறானது. இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் ஒன்றும், பெரியதல்ல என்று இங்கே உறுப்பினர்கள் சிலர் கூறியபோது, வியப்பாக இருந்தது. பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து நாட்டிலும் உலகத்திலும் கிடைக்கும் அனைத்து வளங்களையும் திரட்டுவதற்கு அரசு முயற்சி செய்தது. பெருந்தொற்று இருக்கும் வரை நாட்டின் ஏழைகளை நாங்கள் பாதுகாப்போம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் தற்போது 80 ஆயிரத்துக்கும் அதிகமான சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. கிராமம் மற்றும் வீட்டுக்கு அருகே கட்டணமின்றி பரிசோதனைகள் உட்பட ஆரம்ப சுகாதார கவனிப்பு இந்த மையங்களில் கிடைக்கின்றன.

கோவிட்-19 பிரச்சினை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் 23 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இதில் மத்திய அரசு ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது வருத்தமளிக்கக்கூடியது. 1975-ல் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து நாம் ஒரு போதும் பாடம் கற்கவில்லை. நமது ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் வாரிசுகளைக் கொண்ட கட்சிகளாகும். ஓர் அரசியல் கட்சியில் ஒரு குடும்பம் அதிகப்பட்ச ஆதிக்கம் பெறும் போது அரசியல் திறமை பாதிக்கப்படுகிறது. காங்கிரஸ் இருந்திருக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்று சில உறுப்பினர்கள் வினவினார்கள். காங்கிரஸ் இல்லாது இருந்தால் அவசர நிலை இருந்திருக்காது. சாதி அரசியல் இருந்திருக்காது. சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள், காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது என்று நான் கூறவிரும்புகிறேன்.

தேச முன்னேற்றத்திற்கும் மாநில விருப்பங்களுக்கும் இடையே முரண்பாடுகள் எதையும் நாங்கள் பார்க்கவில்லை. நாட்டின் வளர்ச்சியை பிராந்திய விருப்பங்களை மனதில் கொள்ளும்போது இந்தியாவின் முன்னேற்றம் வலுவானதாக இருக்கும். நமது மாநிலங்கள் முன்னேறும்போது நாடு முன்னேறும். மாறுபாடுகளின் பாரம்பரியத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவந்து ஒரே மனநிலையுடன் ஒருங்கிணைந்து நடைபோடுவது காலத்தின் தேவையாகும். நம்பிக்கையுடன் இந்தியாவை ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்க்கும் ஒரு பொன்னான காலத்தை நாம் இழந்துவிடக் கூடாது” என்று பேசியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.