பள்ளி வளாகத்தில் ’ஜெய் ஸ்ரீராம்’, ’அல்லாஹ் அக்பர்’ கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது: கர்நாடக அமைச்சர் காட்டம்

பெங்களூரு: ‘ஜெய் ஸ்ரீராம் என்றோ, அல்லாஹ் அக்பர் என்றோ பள்ளி வளாகத்தில் கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது என்று கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “சட்டம்-ஒழுங்கை யாரும் கையில் எடுத்துவிட முடியாது. எந்தத் தவறான செயலையும் அரசு விட்டுவைக்காது. மாண்டியாவில் அந்த மாணவி வரும்போது எந்த மாணவர்களும் அவரை சுற்றி வளைக்கவில்லை. எந்த மாணவர்களும் அவர் அருகில் செல்லவில்லை. ’ஜெய் ஸ்ரீராம்’ என்றோ, ’அல்லாஹ் அக்பர்’ என்றோ பள்ளி வளாகத்தில் கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது” என்று தெரிவித்தார்.

இதனிடையே, ஹிஜாப் விவகாரம் குறித்து மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்ய தாக்ரே கூறும்போது, “பள்ளிகள் சீருடை சார்ந்து என்ன சொல்கிறதோ, அதனைத்தான் பின்பற்ற வேண்டும். கல்வி மையங்களில் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். மதம் அல்லது அரசியல் பிரச்சினைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு கொண்டு வரக் கூடாது” என்று கூறியுள்ளார்.

என்ன நடந்தது?

ஹாசன் அரசு கல்லூரிக்கு நேற்று ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை காவித் துண்டு அணிந்த‌ ஏபிவிபி அமைப்பினர் சூழ்ந்துகொண்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பினர். அந்தக் கூட்டத்துக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக ‘அல்லாஹ் அக்பர்’என முழக்கம் எழுப்பிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தீவிரமடைந்துள்ளதால் காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமாறு கர்நாடகா அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் பசவராஜ் பொம்மை, ”அடுத்த 3 நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள‌ அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை” அறிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.