வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

ஆமதாபாத்,
பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. 
இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி அதே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
கேப்டன் ரோகித் சர்மா  (5 ரன்கள்), ரிஷப் பண்ட் (18 ரன்கள்), விரட் கோலி (18 ரன்கள்) ஆகிய நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து ஏமாற்றினாலும்  கே.எல் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  49 ரன்களில் ரன் அவுட் ஆனார். 
அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் 64 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால்,இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 237- ரன்கள் எடுத்தது.  இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு  238-ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.