காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகள் – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர் நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோருக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த போலீசார், இது தவறான புகார் என வழக்கை முடித்து வைத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை நாமக்கல் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இதனை எதிர்த்து வசந்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புகார் மீது மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டது.
image
அதன்படி, வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் பாக்கியலட்சுமி, தவறான புகார் என வழக்கை மீண்டும் முடித்து வைத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவின்படி மறுவிசாரணை நடத்தாமல், வழக்கை முடித்து வைத்ததாகக் கூறி, ஆய்வாளர் பாக்கியலட்சுமிக்கு எதிராக வசந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஆய்வாளர் பாக்கியலட்சுமி தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், நில விற்பனை சிவில் வழக்கு என்பதால் வழக்கை முடித்து வைத்ததாகவும், மறுவிசாரணை நடத்தப்பட்டதாகவும் வாதிட்டார். மேலும், தவறு செய்திருப்பதாக நீதிமன்றம் கருதினால் மன்னிப்பு கோருவதாகவும் ஆய்வாளர் பாக்கியலட்சுமி தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வேல்முருகன், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை எனக் கூறி, அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.
image
பின்னர் நீதிபதி கூறுகையில், ” நிலத்தை விற்பனை செய்தவர் உயிருடன் இருந்தபோதே விசாரித்திருந்தால் முழு உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கும். தற்போது காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளார்கள். 10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருக்கிறார்கள். ஊழல்வாதி அதிகாரிகளை களைந்துவிட்டு, திறமையற்ற அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது” என தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.