Lock Upp: ஜெயிலுக்குள் 16 போட்டியாளர்கள்… கங்கனா ரணாவத்தின் புதுவிதமான ஓடிடி ரியாலிட்டி ஷோ!

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி தலைப்புச் செய்தியாகும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இப்போது மீண்டும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி உள்ளார். அதிரடியான, புதுவகையான ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தும் ஹோஸ்ட்டாக அவர் பங்கேற்க உள்ளார். ரியாலிட்டி நிகழ்ச்சிகள், பிக் பாஸ் அறிமுகத்திற்கு பிறகு இந்தியாவில் வேறு வேறு பரிணாமங்களை எடுத்து வருகின்றன. அந்த வரிசையில் வரவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் கங்கனா, படத்தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உடன் இணைந்திருக்கிறார். ‘Lock Upp’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஷோ எந்த வெளிநாட்டு நிகழ்ச்சிகளையும் போல் இல்லாது புதுவிதமானதாக இருக்கும் என்கிறார்கள்.

Lock Upp OTT Reality Show

72 நாள்கள், 16 போட்டியாளர்கள் கொண்டு ஜெயில் போன்ற அமைப்பில் இந்த விளையாட்டு நடத்தப்பட உள்ளது. சிறையில் இருக்கும் போட்டியாளர்கள் பல்வேறு சிக்கல்கள், தடங்கல்களைச் சமாளிக்க வேண்டும். இதில் கங்கனாவுக்கு போட்டியாளர்களைத் தக்க வைக்கவும் வெளியே அனுப்பவும் 50 சதவிகித அதிகாரம் இருக்குமாம். ஏக்தா கபூர் இதற்கான அறிவிப்பை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதன் டீசர் நாளை வெளியாகிறது.

பிப்ரவரி 27 முதல் MX Player மற்றும் ALT Balaji ஆகிய ஓடிடி தளங்களில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இதில் பங்கேற்பாளர்களாக யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும், சுஷ்மிதா சென்னின் முன்னாள் காதலர் ரோமன் சால், பிக் பாஸ் 13வது சீசன் போட்டியாளர் சீனாஸ் கில், பூனம் பாண்டே, உர்பி ஜாவித், அனுஷ்கா சென், மல்லிகா ஷேராவத் உள்ளிட்ட பெயர்கள் அடிபடுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.