திமுக – பாஜக – திமுக: மீண்டும் திமுகவுக்கு தாவினார் ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம்…

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம். மீண்டும் திமுகவுக்கு தாவினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் கடந்த 2020ம் ஆண்டு, திடீரென டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது சர்ச்சையானது. இதையடுத்து, அவரிடம் கட்சி தலைமை விளக்கம் கேட்டது. இதற்கு பதில் அளித்த கு.க.செல்வம், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திப்பது தவறா என்று கேள்வியும் எழுப்பினார். தைரியம் இருந்தால் தன் மீது தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் பேட்டி அளித்திருந்தார். அதையடுத்து, அவர் கட்சியில் இருந்து 2020ம் ஆண்டு  ஆகஸ்டு 13ந்தேதி  நீக்கப்பட்டார்.

இதையடுத்து கட்சியில் இருந்து  என்னை  நீக்கியது நியாயம் இல்லை;  ஜனநாயக படுகொலை என  விமர்சித்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. பின்னர், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது, 50 ஆண்டு திராவிட கட்சியில் இருந்தேன், திமுக இப்போது ஒரு குடும்பத்தின் கட்சியாக செயல்படுகிறது, எனக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படலாம் என்று விமர்சித்ததுடன், பா.ஜ.கவில் இணைந்தது மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று திடீரென கு.க.செல்வம் பாஜகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் மீண்டும் இணைத்துக்கொண்டார்.

பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.