நாட்டின் எல்லைகள் குறித்த பதிவு விவகாரம்: ராகுல்காந்தி மீது தேசதுரோக வழக்கு?: அசாம் மாநில போலீஸ் தகவல்

கவுகாத்தி: ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவில் வடகிழக்கு மாநிலங்கள் எதையும் குறிப்பிடாததால், நாட்டின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக குற்றம்சாட்டி அசாம் மாநில பாஜக உறுப்பினர்கள் காவல்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்களை அளித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் தேச துரோக வழக்கு பதிய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த 10ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட டுவிட்டில், ‘நமது ஒன்றியத்தில்தான் பலம் உள்ளது. நமது கலாசாரங்களின் ஒன்றியம். நமது பன்முகத்தன்மையின் ஒன்றியம். நமது மொழிகளின் ஒன்றியம். நமது மக்களின் ஒன்றியம். நமது மாநிலங்களின் ஒன்றியம். காஷ்மீர் முதல் கேரளா வரை. குஜராத்தில் இருந்து மேற்குவங்கம் வரை. இந்தியா அதன் அனைத்து வண்ணங்களிலும் அழகாக இருக்கிறது. இந்தியாவின் ஆன்மாவை அவமதிக்காதீர்கள்’ என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து எதையும் குறிப்பிடாமல், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பிரித்து, நாட்டின் நல்லிணக்கத்தை கெடுக்கிறார் என்றும், இது அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பதைப் போன்றது என்று புகார் எழுந்தது. மேலும், நாட்டின் எல்லை குறித்த விஷயத்தில் சீனாவின் நிகழ்ச்சி நிரலில் அவர் இணைந்துள்ளார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. ராகுலின் கருத்தானது, நாட்டின் புவியியல் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அசாம் பாஜக இளைஞரணி ஊடக ஒருங்கிணைப்பாளர் பிஸ்வஜித் கவுண்ட் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ராகுல்காந்திக்கு எதிராக அசாம் பாஜக மற்றும் அதன் பல்வேறு அமைப்புகள் மூலமாக, காவல்துறையில் நூற்றுக்கணக்கான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதனால், ராகுல் காந்திக்கு எதிராக தேச துரோக வழக்கு பதியப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தும் வடகிழக்கு மாநில காவல் நிலையங்களில் ஏதேனும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.