உதயாஸ்தமன சேவையில் திருப்பதியில் 38 டிக்கெட்டுகள் மூலம் ரூ.70 கோடி வசூல்

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் உதயாஸ்தமன சேவை டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

ஏழுமலையானுக்கு அபிஷேகம் நடைபெறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த டிக்கெட்டின் விலை ரூ.1.50 கோடியாகும். மற்ற சாதாரண நாட்களில் இதே டிக்கெட்டின் விலை ரூ. 1 கோடி என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டணம் நிர்ணயித்துள்ளது.

டிக்கெட்டுகளை பெற்ற பக்தர் தனது குடும்பத்தாருடன் திருமலைக்கு வந்து ஏழுமலையானுக்கு தினசரி நடைபெறும் சுப்ரபாத சேவை முதற்கொண்டு, இரவு ஏகாந்த சேவை நடைபெறும் வரை அனைத்து சேவைகளையும் அருகில் இருந்து ஒரு விஐபி பக்தரை போல் கண்டுகளிக்கலாம்.

இதுபோன்று, அந்த பக்தர் தனது வாழ்நாளில் தொடர்ந்து 25 ஆண்டுகள் வரை இந்த உதயாஸ்தமன சேவையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை வீதம் பங்கேற்கலாம்.

இப்படி கட்டணத்தில் வசூலாகும் பணம் திருப்பதியில் குழந்தைகளுக்கான புற்றுநோய் மருத்துவமனையை ரூ.600 கோடி செலவில் கட்ட தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

இதற்கான 38 டிக்கெட்டுகளை ஆன்லைனில் நேற்று திருப்பதி தேவஸ்தானம் தனது இணைய தளத்தில் வெளியிட்டது. வெளியிட்ட 1 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. இதன் மூலம் ரூ.70 கோடி வசூலானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.