ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் ‘அட்மிட்’: மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பு

ராஞ்சி: ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட லாலுவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கால்நடை தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கில் கடந்த 15ம் தேதி குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் யாதவுக்கு நேற்று சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி  நேற்று 5வது வழக்கில், லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் லாலு அடைக்கப்பட்டார். அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ராஞ்சி மருத்துவமனையில் லாலு உடல்நிலை மோசம் அடைந்துள்ளதாக டாக்டர்கள் குழுவின் தலைவர் வித்யாபதி கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘லாலு பிரசாத் யாதவின் ரத்த அழுத்தமும், சர்க்கரை அளவும் ஏற்ற இறக்கமாக உள்ளது. சர்க்கரை அளவு காலையில் 70 ஆக இருக்கிறது. பிற்பகலில் 240 ஆக உயர்ந்து விடுகிறது. ரத்த அழுத்தம் 130 முதல் 160 வரை ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. அவரது சிறுநீரகம் வெறும் 20 சதவீத திறனுடன் இயங்கி வருகிறது. அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. தொடர் கண்காணிப்பில் உள்ளார்’ என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.