கொங்குவில் அ.தி.மு.க டோட்டல் டேமேஜ்: அசைன்மென்ட்-ஐ முடித்த செந்தில் பாலாஜி!

Urban body civic polls 2022 Kongu belt results : கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது, திமுகவின் எந்த வகையான திட்டங்களும் செல்லுபடியாகாத ஒரு இடமாகவே பார்க்கப்பட்டது கோவை மாவட்டம். தேர்தல் முடிவுகளும் கூட அதிமுகவிற்கு சாதமாகவே அமைந்தது. கட்சியைத் தாண்டியும் அந்த பகுதி எம்.எல்.ஏக்கள் செய்த நலப்பணிகள் தான் அதற்கு காரணம் என்று பல தரப்பினரும் கூறினர். ஆனால் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சி நகர்ப்புற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில், கோவை பொதுமக்கள் தங்கள் பார்வையை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பக்கம் திருப்பியுள்ளனரா என்ற கேள்வியை கேட்க வைத்துள்ளது.

கோவையில் மொத்தமாக 33 பேரூராட்சிகள், 7 நகராட்சிகள் மற்றும் 1 மாநகராட்சி அமைப்பு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளாக செயல்பட்டு வருகின்றது. 41 உள்ளாட்சி அமைப்புகளுக்கு 19ம் தேதி தேர்தல்கள் நடத்தப்பட்டு இன்று காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் பதிவான வாக்குகள் தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. மாநகராட்சி தேர்தல் அலுவலர் ராஜகோபால் முன்னிலையில் அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி காலையில் தொடங்கியது.

சென்னையில் சிவகாமி ஐஏஎஸ் தோல்வி: திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மகன் வெற்றி

நகராட்சி நிலவரம்

மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, வால்பாறை, கூடலூர், கருமத்தம்பட்டி, மதுக்கரை ஆகிய 7 நகராட்சிகளில் உள்ள பல வார்டுகளில் திமுக முன்னணி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வரிசை எண் நகராட்சி பெயர்
1 மேட்டுப்பாளையம்
2 பொள்ளாட்சி
3 வால்பாறை
4 கூடலூர்
5 காரமடை
6 கருமத்தம்பட்டி
7 மதுக்கரை

மேட்டுப்பாளையம் நகராட்சியில் பதிவான வாக்குகள், அங்குள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது. பொள்ளாட்சி நகராட்சியில் பதிவான வாக்குகள் மகாலிங்கம் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அந்த நகராட்சியின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. காரமடை நகராட்சியின் வாக்குகள் காரமடை, மெட்ரோ மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், கூடலூர் நகராட்சியின் வாக்குகள் பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா பாலிடெக்னிக் கல்லூரியிலும், கருமத்தம்பட்டி நகராட்சியின் வாக்குகள் கருமத்தம்பட்டி புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மதுக்கரை நகராட்சியின் வாக்குகள் மதுக்கரை ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரியிலும் எண்ணப்பட்டு வருகிறது.

மாநகராட்சி அமைப்பிற்கு பதிவான வாக்குகள் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றி 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதர 17 இடங்களில் 2000க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பேரூராட்சிகள் :

மோப்பிரிபாளையம், சிறுமுகை, அன்னூர் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அன்னூர் அமரர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது. ஆனைமலை, ஜமீன் ஊத்துக்குளி, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் பேரூராட்சிகளின் வாக்குகள் ஆனைமலை வி.ஆர்.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது. கோட்டூர், சூளேஸ்வரன்பட்டி, சமத்தூர் பேரூராட்சிகளின் வாக்குகள் கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகிறது. பெரியநாயக்கன்பாளையம், நம்பர் 4 வீரபாண்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளின் வாக்குகள் பெரியநாயக்கன்பாளையம் பயனீர்மில்ஸ் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை; ஆலந்தூர், சோழிங்கநல்லூரில் தாமதமாக தொடக்கம்; போடியில் ரகளை

ஒத்தக்கால் மண்டபம், செட்டிபாளையம், வெள்ளலூர், கிணத்துக்கடவு, பெரிய நெகமம், எட்டிமடை, திருமலையாம்பாளையம் பேரூராட்சிகளின் வாக்குகள் பிரிமீயர் மில்ஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.குளம், இடிகரை பேரூராட்சிகளின் வாக்குகள் கோவில்பாளையம் இன்ட்ரோ இன்ஸ்ட்டிடியூட் பொறியியல் கல்லூரியிலும், தாளியூர், தொண்டாமுத்தூர், வேடபட்டி, பேரூர் பேரூராட்சிகளின் வாக்குகள் வடவள்ளி மருதமலை தேவஸ்தான பள்ளியிலும், பூலுவப்பட்டி, ஆலாந்துறை, தென்கரை பேரூராட்சிகளின் வாக்குகள் ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்பட்டு வருகிறது. அதே போன்று சூலூர், கண்ணம்பாளையம், இருகூர், பள்ளப்பாளையம் பேரூராட்சிகளின் வாக்குகள் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகிறது.

சிறையில் ஜெயக்குமாருக்கு முதல் வகுப்பு: ஜாமீன் மனு மீது நாளை விசாரணை

திமுகவின் நகர்வு

2011, 2016 மற்றும் 2021 என்று சமீபத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களில் அதிமுகவின் கைகளே ஓங்கி இருந்தது. 2011 மற்றும் 21 தேர்தல்களில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. 2016ம் ஆண்டு தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் மட்டுமே திமுக வென்றது. 2021ம் ஆண்டு தேர்தலில் கோவையில் அதிமுக 43% வாக்குகளை பெற்றது. திமுகவின் வாக்கு வங்கியானது 37% இருந்தது. மக்கள் நீதி மய்யம் கணிசமாக 14% வாக்குகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

“கோட்டை, கொத்தளம் என்றார்கள்… கடையில் கொங்கு பெல்ட்டில் மாஸான வெற்றி என்னவோ திமுகவுக்கு சாதகமாக தான் இருக்கிறது” என்று பலரும் சமூக வலைதளங்களில் தற்போது பேசி வருகின்றனர்.

2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவையை பொறுத்தவரை திமுகவிற்கு சாதகமாக ஒன்றும் நடைபெறவில்லை. மக்கள் நலப்பணிகள் சிறப்பாக சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்கவும், வளர்ச்சிப் பணிகளை துரிதாக செய்து முடிக்கவும் கடந்த ஆண்டே முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு அமைச்சர்கள் பலரை நியமித்தார். அந்த வகையில் கோவை மாவட்டத்துக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதிமுகவின் கோட்டையாக இருக்கும் ஒரு இடத்தில் வெறும் வளர்ச்சி பணிக்காக மட்டும் ஒருவரை நியமிப்பதற்கு பதிலாக, திமுக கால்தடம் பதிக்கம் அளவிற்கு வலிமையான நபரை உள்ளே களம் இறக்க வேண்டும் என்று விரும்பியது. எஸ்.பி. வேலுமணியின் அசுர வளர்ச்சியை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜி களம் இறக்கப்பட்டார் என்றே கூறலாம்.

Tamil Nadu Minister Senthil Balaji talked about Velumani Arrest
அமைச்சர் செந்தில் பாலாஜி

கொடிசியா வளகாத்தில் உதயநிதி ஸ்டாலினை அழைத்து வந்து, நிர்வாக கூட்டம் நடத்தியது முதல், பொறுப்புகளை கட்சித் தலைவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தது வரை அனைத்து பணிகளையும் மேற்கொண்டார் செந்தில் பாலாஜி. முதன்முறையாக, நடைபெற்ற அந்த கூட்டத்திலேயே வேலுமணிக்கு எதிராக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை திமுக ஆரம்பித்தது என்றே கூறலாம்.

22 வயது பட்டதாரி வெற்றி; சுயேட்சையாக போட்டியிட்டவரை தேர்வு செய்த மக்கள்

வேலுமணிக்கு எதிராக போட்டியிட்ட கார்த்திக்கேய சிவசேனாதிபதி, ”எஸ்.பி. வேலுமணி வீட்டிற்கு ரெய்டு வந்தீர்களே, அவரை எப்போது கைது செய்வீர்கள்” என்று கட்சிக்காரர்கள் கேட்டதாக அவர் கூறினார். அன்று முதல் பல்வேறு பிரச்சாரங்களில் எஸ்.பி. வேலுமணியின் தலை உருட்டப்பட்டது.

”கொலுசு கொடுத்ததும் உண்மை, தலைக்கு ரூ. 1000 கொடுத்ததும் உண்மை, சட்டமன்ற தேர்தலைக் காட்டிலும் அதிக அளவில் பணம் புரண்டதும் உண்மை தான்” என்று வாக்காளர்கள் அரசல் புரசலாக பேச, கடந்த காலங்களில் வாக்காளர்களை வளைக்க அதிமுக எடுத்த அதே பாணியை இந்த முறை திமுகவும் எடுத்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஜனநாயகத்துடன் தேர்தலை நடத்த வேண்டும் என்று எஸ்.பி. வேலுமணியும் அவர்களின் சகாக்களும் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட, இதையெல்லாம் காதில் வாங்காமல் மொத்த எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளையும் “லெஃப்டில் டீல்” செய்தது திமுக.

Ex minister S P Velumani case
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கூட்டணி நிலவரம்

கோவையில் உள்ள 100 வார்டுகளில் திமுக 75 இடங்களில் போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் 9 இடங்களிலும், சி.பி.எம். 5 இடங்களிலும், சி.பி.ஐ 4 இடங்களிலும், மதிமுக 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அதே போன்று கூட்டணியில் இடம் பெற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 2, மமக, இயூமுலீக் தலா 1 என இக்கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. அதிமுக 99 வார்டுகளிலும் தமாக 1 வார்டிலும் களம் இறங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜக தனித்து போட்டியிட்டது. அதே போன்று நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளும் கோவையில் தனித்து களம் இறங்கினர்.

Coimbatore Urban Polls latest updates

மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் படி, 100 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான போட்டியில் 20 இடங்களில் திமுக வெற்றியை பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ. (எம்) கட்சி இரண்டு இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக ஒரே ஒரு வார்டில் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

198 நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான போட்டியில் 129 வார்டுகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அதிமுக 13 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. திமுக 102 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான சி.பி.ஐ.(எம்) கட்சி ஒரு இடத்திலும், இந்திய தேசிய காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

513 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான போட்டியில் 432 இடங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 68 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 321 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான சி.பி.ஐ – 1 இடத்திலும், சி.பி.ஐ.எம். 4 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.