ஒரே நாளில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படங்களில் ட்ரெய்லர் ஒரே நாளில் வெளியாகின்றன.

‘ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வரும் மார்ச் 10 ஆம் தேதி ’எதற்கும் துணிந்தவன்’ தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில், வரும் மார்ச் 2 ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது படக்குழு. அதேசமயம், மார்ச் 11 ஆம் தேதி வெளியாகும் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ட்ரெய்லரும் மார்ச் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

image

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில்‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்துள்ளார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர்.1970-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

image

இந்த நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துடன் ஒட்டி ‘ராதே ஷ்யாம்’ வெளியாவதுபோலவே, ட்ரெய்லர் அப்டேட்டையும் வெளியிட்டிருக்கிறார்கள். இன்று மதியம் வரும் மார்ச் 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு ’எதற்கும் துணிந்தவன்’ ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது மார்ச் 2 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ’ராதே ஷ்யாம்’ ட்ரெய்லர் வெளியாகும் என்று போட்டியாக அறிவித்திருக்கிறது ‘ராதே ஷ்யாம்’ படக்குழு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.