உடனடியாக போரை நிறுத்துங்கள்: ஐ.நா. பொதுச் சபை அவசர கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கடந்த 6 நாட்களாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா.பொதுச் சபையின் அவசரக் கூட்டம் நேற்று முன்தினம் கூடியது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா.சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:

உக்ரைன் நிலவரம் மோசமான நிலையை அடைந்து வருவது இந்தியாவை மிகவும் கவலையடையச் செய்துள்ளது. எனவே, உடனடியாக போரை நிறுத்த வேண்டும். எந்த ஒரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தைதான் தீர்வு என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது. உடனடி போர் நிறுத்தம் செய்யப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். போரினால் ஏற்கெனவே பலர் இறந்துவிட்டனர். எனவே, பகமைக்கு முற்றுப்புள்ளிவைத்து அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு தேவையான மருந்துகள், நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க இந்தியா முடிவுசெய்துள்ளது. எந்த ஒரு பிரச்சினைக்கும் அமைதியான வழியில் தீர்வு காண்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. அமைதி திரும்ப பேச்சுவார்த்தைதான் ஒரே வழி. மனிதாபிமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது முக்கியமானது.

உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க எல்லைகளை திறந்த அண்டை நாடுகளுக்கு இந்தியா நன்றி தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.