ரஷியா தாக்குதலில் உக்ரைன் மக்கள் 1000 பேர் உயிரிழப்பு- ஐ.நா. சபை தகவல்

நியூயார்க்:
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி உக்ரைன் நிலைகளை அழித்தது. முக்கிய நகரங்களையும் ரஷியா கைப்பற்றி உள்ளது.
அதேநேரத்தில் பிற நாடுகளின் ராணுவ தளவாடங்களின் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை உக்ரைன் நாட்டை சேர்ந்த 1000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தகவலை ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் உக்ரைனில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமை குறித்து விவாதிக்கப்படுகிறது.
அதேநேரத்தில் தாங்கள் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷிய வீரர்களை கொன்று விட்டதாக உக்ரைன் அரசாங்கம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக உக்ரைன் ராணுவம் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
ரஷிய படைகளின் 251 டாங்கிகள், 939 கவச வாகனங்கள், 105 பீரங்கி அமைப்புகள், 18 விமான எதிர்ப்பு போர் அமைப்புகள், 33 விமானங்கள், 37 ஹெலிகாப்டர்கள், 404 வாகனங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. 9,166 ரஷிய படை வீரர்கள் இந்த போரில் கொல்லப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.