மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தையில்… நம்பிக்கை தெரிவித்த உக்ரைன்


கடும் நெருக்கடிக்கு மத்தியில் உக்ரைன்-ரஷ்யா இடையே மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு, முடிவு எட்டாத நிலையில், வரும் 7ம் திகதி மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா போரை கை விட்டு பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மன்ற பொது சபை உறுப்பு நாடுகளும் வலியுறுத்தி வந்துள்ளன.

இதனிடையே, இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை தொடர்பில் ரஷ்ய தூதுக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
அதில், முற்றுகையிடப்பட்ட நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற, பாதுகாப்பான வழித்தடங்களை உருவாக்குவது,

மற்றும் உள்ளூர் போர் நிறுத்தங்களைக் கடைப்பிடிப்பது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டின என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆலோசகரும், தூதுக்குழு தலைவருமான விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்திருந்தார்.

மேலும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஒப்பந்தங்களுக்கு வழிவகுக்கும் என்றும், இருப்பினும் அதில் சில இரு நாட்டு நாடாளுமன்றங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன்-ரஷ்யா இடையேயான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை வரும் மார்ச் 7ம் திகதி நடைபெற உள்ளதாக உக்ரேனிய தூதுக்குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டேவிட் அராகாமியா, தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்ற நம்பிக்கையும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் உக்ரைன் விவகாரத்தில் இரு நாடுகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்க முனைப்பு காட்டி வருகிறார்.

ரஷ்ய ஜனாதிபதியை நேரில் சந்தித்து சுமார் 3 மணி நேரம் பேசியுள்ள நஃப்தலி பென்னட் தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் ஜேர்மனிக்கு புறப்பட்டு சென்றுள்ளதாகவும், விரைவில் முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.