இங்கு எல்லாமே தொடர்கதைதானே! #MyVikatan

இந்தப் பூவுலகில் நடப்பவை அனைத்தும் தொடர்கதைதான்!பிறப்பு இனிப்பான தொடர்கதை என்றால், இறப்பு ஏற்றுக் கொள்ள முடியாத தொடர்கதை.இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கையோ,வளமும்,வம்பும் நிரம்பிய வலிய தொடர்கதை.காயும் வெயிலும்,கனன்றடிக்கும் மழையும்,வளரும் பிறையும்,தேயும் நிலவும் என்றென்றும் இயற்கையின்தொடர்கதை.தாலாட்டும் தென்றலும்,தகிக்க வைக்கும் புயலும்,கால் தழுவும் கடலும்,கட்டிட உயர ஆழிப்பேரலைகளும் (சுனாமி)தொடர்ந்து வருபவைதாமே. உறவும்-பிரிவும், இன்பமும்-துன்பமும்,காதலும்-சோகமும்,மேடும்-பள்ளமும், இப்படி,

இங்கே எல்லாமே தொடர்கதைதான்.வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிந்து கொண்டவர்கள் இந்தத் தொடர்கதைகளோடு ஒன்றிப் போய்த்தான் ஆக வேண்டும்.அப்புறம் அவள் மட்டும் சிறுகதையாகச் சிறிது நேரத்தில் முடிந்து போய்விடுவாளா…என்ன? அவளும் ஒரு தொடர்கதைதான். அனைவராலும் விரும்பிப் போற்றப்படும் அழகிய தொடர்கதை. ஆணும் பெண்ணும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்றாலும்,தலைக்குச் சமுதாயத்தில் அதிகமான ஆதரவு அக்காலத்திலிருந்தே உண்டு.பூவுக்கு நான்கு சுவர்களுக்குள் நல்லாதரவு உண்டு என்றாலும்,வெளி உலகில் அவர்களின் விவேகம் அவ்வளவாகப் போற்றப்படவில்லை. ராணி மங்கம்மாள்,வேலு நாச்சியார் போன்றோர் அக்காலத்திலும், டாக்டர் முத்துலட்சுமி போன்றோர் இக்காலத்திலும் சமூக நலங்காக்கப் போராடியவர்களில் முக்கியமானவர்கள் என்பதை அனைவரும் அறிவோம்.ஆனாலும் வெற்றிகரமான ஆண்கள் அனைவருக்கும் பக்க பலமாகவும்,வீட்டுக்கு வெளியே அவர்கள் வீரர்களாக உலா வர,வேண்டிய உற்சாகத்தையும்,உத்வேகத்தையும் அளிக்கும் உரம் மிக்கவர்களாகவும், வீட்டுக்கு உள்ளே பெண்களே திகழ்ந்துள்ளார்கள் என்பதற்கு,வரலாற்றுச் சான்றுகள் தேவையில்லை. ஏனெனில் அது உலகறிந்த ரகசியம்.அது போல, அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெண்கள் முன்னிலை வகிக்க முக்கியக் காரணங்களாக அவர்கள் கணவன்மார்களே இருந்திருக்கிறார்கள் என்பதும் ஊரறிந்த உண்மை.புருஷன்களின் பலமுமில்லாமல், அண்ணன்,தம்பிகளின் அரவணைப்புமில்லாமல்,காதலர்களின் கனிவுமில்லாமல்,களத்தில் தனியாக நின்று,குடும்பப் பாரத்தையே தான் ஒருவளாகச் சுமக்கும் கவிதாவைப் போன்றோர் நம் சமுதாயத்தில் மிகக்குறைவே. அதிலும் 48 ஆண்டுகளுக்கு முன்னரே,தனியளாக நின்று சாதித்துக்காட்டிய அவள் வாழ்க்கை ஒரு தொடர்கதைதான். அது தொடர்ந்த காரணத்தாலேயே இன்று பல வீடுகளில் பெண்கள் முக்கிய வருமானத்திற்கு வழிகோலும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.நாட்டைக் காக்கும் போர் வீரளாகவும்(வீரனுக்கு எதிர்ப்பதம் வீரள் என்று கொள்வோமே.அவனுக்கு எதிர்ப்பதம் அவள் என்பது போல),ஆகாய விமானங்களை இயக்கும் அதி நவீன பெண்களாகவும்,அனைத்துத் துறைகளிலும் அற்புதங்களை நிகழ்த்தும் அசகாய சூரிகளாக உலகப் பெண்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.

அவள் ஒரு தொடர்கதை

சரி.’அவள் ஒரு தொடர்கதை’யை சற்றே அசை போடலாமா?

1974 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தின் கதையை சுகி சுப்பிரமணியன் அவர்களின் மகனான எம்.எஸ்.பெருமாள் எழுதியிருந்தார்,’வாழ்க்கை அழைக்கிறது’என்ற குறுநாவலாக.குடும்பத்தை நிர்க்கதியாக தந்தை விட்டுப்போக,பாரத்தைச் சுமக்க வேண்டிய மூத்த மகன் பார்களே கதியென்று அலைய,அவர் குடும்பத்தையும் சேர்த்துக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் கவிதா,தன் ஆசாபாசங்களை விட்டு,கனவுகளை ஏற்படுத்திய காதலனையும் தங்கைக்கு விட்டுக்கொடுத்து,இருட்டை விரட்டி ஒளியைத் தருவதற்காகத் தன்னையே அழித்துக் கொள்ளும் மெழுகு வர்த்தியாய்க் கரைந்து போவதுதான் கதை.கரைந்து போகும் சில, நம் மனதில் அழிக்க முடியாத கறைகளை ஏற்படுத்திச் செல்வது உண்டல்லவா?அந்தக் கறையே காலங்கடந்தும் நம் மனங்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது.

சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது கட்டவிழ்ந்து கொள்கிறது. பிரியமானவர்களுடன் அதுகுறித்துப் பேசத் தூண்டுகிறது. அடிமனத்தை வருடிய ஆழ்ந்த நினைவுகள் ஆவி பிரியும் வரை உள்ளத்தில் உலா வந்து கொண்டுதானே இருக்கும். மகிழ்வான தருணங்களை மனத்தில் நினைப்பதால் உடலுக்கு உற்சாகமும்,உள்மனதுக்கு நிம்மதியும் கிடைப்பதாக உளவியலாளர்கள் கூறுகிறார்கள். மனநல மருத்துவர்கள் சொல்லுவதும் இதைத்தான். அருகில் அனல் கொழுந்து விட்டு எரியும்போது கூட, ஊட்டி, கொடைக்கானலில் அனுபவித்த குளிர்ச்சியை மனத்தில் நினைத்துக் கொண்டால் அந்த வெப்பத்திலிருந்து தப்பிக்கலாமாம். மனமும் அதன் உறுதியுமே மனிதனை மகானாக்குகிறது என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன.என்ன? சாதாரண மனிதர்களால் அந்த உறுதிப் பாட்டில் உறுதியாக இருக்க முடிவதில்லை.ஆனால் அந்தக் கவிதாவின் உறுதி அனைத்துப் பெண்களுக்கும் ஒரு மறக்க முடியாத பாடம். குடும்பக்கதை, கொஞ்சப்படும் வரலாறாகிப் போவது அதன் ட்ரீட் மென்டில்தான்.காட்சி அமைப்புகளாலும், ’கட்’ வசனங்களாலும் படத்தை உயரத்திற்குக் கொண்டு செல்ல முடியுமென்பதற்கு, இப்படமே சிறந்த உதாரணம்.

வசனத்தைக் கூடப் பல வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். இதமளிக்கும் வசனம்,இன்பந்தரும் வசனம்,குத்திக் கிழிக்கும் வசனம்,குதறிப்போடும் வசனமென்று பலவகை உண்டு.உரிய இடத்தில்,உரிய வசனத்தை வைப்பதில்தான் இயக்குனரின் திறமை இருக்கிறது.அந்தத் திறமையே இயக்குனரைச் சிகரமாக்குகிறது.சிறுவர்கள் வீட்டில் விளையாடும்போது,’ராச்சசி இல்ல…ரா..ட்..சசி’ என்று சொல்வதில் ஆரம்பித்து,’கல்யாணத்துக்கு முன்னாடி பெண்கள் கர்வமா இருக்கலாம்.கர்ப்பமாத்தான் இருக்கக் கூடாது’என்ற வசனத்திலாகட்டும், ’ஓர் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் இடையில் எந்தச் சண்டை வேணும்னா வரலாம்.ஆனா சக்களத்தி சண்டை மட்டும் வரக்கூடாது!’என்பதிலாகட்டும்,கே.பியின் ‘டச்’ பளிச்சென பிரகாசிக்கும். குழந்தை தொடர்ந்து அழ,சுஜாதா எழுந்து வர,குடிகார அண்ணனும் அண்ணியும் படுக்கையறையிலிருந்து வெளியே வர, ’பணப்பசியைத் தீர்க்க ஒரு தங்கச்சி, வயித்துப்பசியைத் தீர்க்க ஒரு தாய், உடற்பசியைத் தீர்க்க ஒரு மனைவி… ச்சீ.. மானங்கெட்ட ஜென்மம்’ என்று சுஜாதா விளாசுவது, குத்திக் கிழிக்கும் வசனம் என்றால், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும் சுஜாதாவை எழுப்பி,’அவர்கிட்ட எத்தனையோ கெட்ட குணங்கள் இருக்கலாம். ஆனா, பெண்கள் விஷயத்தில அவர் தப்பு பண்றதில்ல.அந்த நல்ல குணமும் அவரை விட்டுப் போயிடக் கூடாதுங்கிறதுக்காகத்தான் என்னையே எந்திரமா மாத்திக்கிட்டேன். மற்றபடி…நீ சொன்னியே உடற்பசி…அது என்னிக்குமே எங்கிட்ட இருந்ததில்லம்மா…’ என்பது இதம் தரும் வசனமல்லவா! ரசிகர்கள் மனதில் அந்த வசனம் மூலம் நங்கூரம் போட்டு விட்டாரே அண்ணி.குடும்பப் பொறுப்பால் தன் காதலையே இழக்கும் சூழலில், காதலன் திலக் (விஜய குமார்)தன் விதவைச் சகோதரியுடன் இணைய, ’அந்தக் கட்டில் சத்தம்…பொறுக்க முடியவில்லை’ என்ற வசனத்தில்தான் எத்தனையெத்தனை அர்த்தங்கள்.அடிமனத்தின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் ஆசைகளை வேதனையாக விளம்பும் விபரக் குறிப்பல்லவா அது! என்ன செய்வது. அவளும் பெண்தானே. அதனைக்கேட்கும்போது நம் உள் மனத்திலும் ஒரு மின்னல் வந்து போகத்தானே செய்யும்.

சாலையில் அடிபட்டுக் கிடக்கும் நாயைக் காப்பாற்றச் சொல்லி உரியவர்களுக்குப் போன் செய்யும்போது’அவள் ஒரு பனிப்பாறை.உருக வேண்டிய சமயத்தில் உருகவும் செய்வாள்’என்பதில்தான் எவ்வளவு பொருள். இப்படிப் படம் முழுவதும் வசனங்களை அள்ளித் தெளித்து நம்மை அவர் வசமாக்கிக் கொள்வார் கே.பி.

வசனங்களாலேயே கதையை வசப்படுத்திய இயக்குனர், பாடல்களாலும், ரியலிசத்தாலும் நம்மை மேலும் திருப்திப்படுத்துவார். இசையை, மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளும், ஏன்?தாவரங்களும் கூட விரும்புவதாக விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ’ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல வேண்டியதை ஒரு படம் விளக்கி விடும்’என்பார்கள். அது போலவே ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை 3 நிமிடப்பாடல், மிக முழுதாகவே விளக்கிடும்.

5 பாடல்களைக் கொண்டே முக்கியக் கதை நாயகர்களின் குண, நலன்களைக் காட்டிடுவர் இப்படத்தில். ’அடி என்னடி உலகம். . இதில் எத்தனை கலகம்…செக்கு மீது ஏறிக்கொண்டால் சிங்கப்பூரு போகுமா. . சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா?பந்தம் என்பது சிலந்திவலை. . பாசம் என்பது பெரும் கவலை. . சொந்தம் என்பது சந்தையடி. . இதில் சுற்றம் என்பது மந்தையடி. . மபடாபட். . விகடகவி கமலின்’கடவுள் அமைத்து வைத்த மேடை’ பாடல் அவரின் ஆற்றாமைக்குச் சான்றாக அமையும். ’கண்ணிலே என்ன உண்டு. . கண்கள்தான் அறியும்’பாடலுக்கு விளக்கமே தேவையில்லை. ’தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு. . ’குடிகார அண்ணனின் தத்துவ முத்து. ’ஆடுமடி தொட்டில்’ என்று அப்புறமும் ஒரு பாடல். கண்ணதாசன், விஸ்வநாதன் காம்பினேஷன் உச்சத்தில் இருந்த நேரம். சுசீலா, ஜானகியை உலகே நன்கறியும். ஜேசுதாசின் மயக்கும் குரல் தத்துவப் பாடலுக்கு மேலும் மெருகு சேர்த்ததில் வியப்பேதுமில்லை. கடவுள் அமைத்து வைத்த மேடை பாடலில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் சீனிவாசனின் பங்கு அலாதியானது. கொலுசு சத்தத்தைக் கூடத் தன் குரலிலேயே கொண்டு வந்தாராம்.

அவள் ஒரு தொடர்கதை

பாலச் சந்தர் போன்ற திரைமேதைகளுக்கு, வேண்டிய நடிப்பைப் பெறுவதில் சிரமம் இல்லாத காரணத்தால், புதியவர்களையே பெரிதும் விரும்பினார்கள். சுஜாதா, ஜெய் கணேஷ், ஜெயலட்சுமி, ஶ்ரீப்ரியா என்று அநேகப் புது முகங்களை அனாயாசமாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர். அவர்களின் மீது வேறு நடிப்பின் சாயல் இல்லாதிருப்பதை ஒரு பலமாகவே பாலச் சந்தர் எண்ணியிருக்க வேண்டும். ’எர்ணாகுளம் ஜங்ஷன்’என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்த சுஜாதாவைப் பிடித்துப் போனாலும், அவரின் தமிழ் உச்சரிப்பிற்காகச் சில காலம் காத்திருந்தாராம் இயக்குனர். நடித்த அனைவருக்குமே சிறந்த எதிர்காலம் ஏற்பட்டதை நாம் கண்கூடாகவே கண்டோம். படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று,

எனது பார்வையில், ரியலிசம். நாயகியைத் துன்பம் சூழும் போதெல்லாம், நாயகன் திடீரென தோன்றி பல பேரையும் அடித்து நாயகியைக் காப்பாற்றுவதாகத்தான் பெரும்பாலான படங்கள் இருக்கும். ரசிகர்களுக்கும், தவறு இழைப்பவர்களை அடித்து, உதைக்க வேண்டுமென்ற ஆர்வம் இருப்பதால், நாயகன் அங்கே எப்படி வந்தார் என்று கேள்வி கேட்கத் தோன்றாது. பல மல்யுத்த வீரர்களைக்கூடக் கதாநாயகன் பந்தாடுவதை விரும்பி ரசிப்போம். உண்மையில் அது சாத்தியமில்லை என்று தெரிந்தும், ஏற்போம். ஆனால் பாலச் சந்தர் படங்களில் அது போன்ற நம்ப முடியாத காட்சிகளை அதிகம் பார்க்க முடியாது. ஜெய் கணேஷை நான்கைந்து பேர் சேர்ந்து அடிக்கையில், ரயில் ஒன்று குறுக்கே போகும். ரயில் க்ராஸ் செய்த பிறகு, அவர் அடிபட்டுக்கிடப்பார். எதார்த்தம். அந்த எதார்த்தமே கே. பி.யை சிகரமாக்கிற்றோ என்று நான் நினைப்பதுண்டு.

25 வாரங்கள் ஓடி, வெற்றி விழா கொண்டாடிய இந்தப்படம், பின்னர், தெலுங்கு, பெங்காலி, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது. இதற்கு முந்தைய ஆண்டு வெளியான‘அரங்கேற்றம்’, போற்றலுக்கும், தூற்றலுக்கும் ஆளாகிப் போனாலும், அதைப்பற்றிய கவலை ஏதுமின்றி முன்னேறினார் கே. பி. இயக்குனர்கள் மணிரத்னம், பாக்யராஜ், ரவிகுமார் போன்றோர் இந்தப்படத்தையே ‘பாலச்சந்தரின் சிறந்த படம்’என்று முத்திரை குத்துவதிலிருந்தே இதன் பெருமையை உணரலாம். 70 களில்தான் பாலச் சந்தர்‘பீக்’கில் இருந்திருக்கிறார். அந்தப் பத்தாண்டுகளில் மட்டும் சுமார் 30 படங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ராம அரங்கண்ணலின் ஆண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், பி. எஸ். லோகநாத்தின் ஒளிப்பதிவில் உருவான ‘அவள் ஒரு தொடர்கதை’ எக்காலத்திலும் புகழ்ந்து பேசப்படும் பொற்படம் என்றே கூறலாம்.

– ரெ. ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.