உ.பியை அள்ளப் போகிறது பாஜக.. பஞ்சாப் ஆம் ஆத்மிக்கே.. புதிய எக்ஸிட் போல்

5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் தொடர்பான புதிய
எக்ஸிட் போல்
ஒன்று இன்று வெளியாகியுள்ளது.

லோக்நிதி – சிஎஸ்டிஎஸ் வெளியிட்டுள்ள இந்த எக்ஸிட் போலில், உ.பியில்
பாஜக
மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றும், அதேபோல பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய வெற்றியை தட்டிச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்நிதி -சிஎஸ்டிஎஸ் எக்ஸிட் போலில் யாருக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்பது குறித்துக் குறிப்பிடப்படவில்லை. மாறாக, யாருக்கு எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் தொடர்பாக லோக்நிதி – சிஎஸ்டிஎஸ் கணிப்பு இதுதான்:

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 7000 பேர். பாஜக கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும். சமாஜ்வாடிக் கட்சிக்கு 35 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புண்டு. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 15 சதவீத வாக்குகள் கிடைக்கலாம். காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 3 சதவீத வாக்குகளுக்கே வாய்ப்புண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள் இணைந்து 4 சதவீத வாக்குகள் பெறலாம்.

பாஜகவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று லோக்நிதி – சிஎஸ்டிஎஸ் கணித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மிக மோசமான தோல்வியைத் தழுவும். அதேபோல உத்தரகாண்ட் மாநிலத்திலும் காங்கிரஸுக்கு பெரும் தோல்வியே கிடைக்கும். கோவா மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் லோக்நிதி – சிஎஸ்டிஎஸ் கணித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 26 சதவீத வாக்குகள் கிடைக்கும். ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ். பாஜக கூட்டணிக்கு 7 சதவீத வாக்குகளே கிடைக்கும். பிற கட்சிகளுக்கு 7 சதவீத வாக்குகள் கிடைக்கும். அகாலிதளம் கட்சி 20 சதவீத வாக்குகளைப் பெறும்.

கோவாவில் பாஜக 32, காங்கிரஸ் 29 சதவீத வாக்குகளைப் பெறும். ஆச்சரியப்படுத்தும் முடிவு எது என்றால் அது திரினமூல் காங்கிரஸ்தான். அக்கட்சிக்கு 14 சதவீத வாக்குகள் கிடைக்கும். ஆம் ஆத்மிக்கு 7 சதவீத வாக்குகள் கிடைக்கும். இந்த இரு கட்சிகளும் கிங் மேக்கராக உருவெடுக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவுக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும். காங்கிரஸுக்கு 38 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை எண்ணப்படவுள்ளன. உ.பியைத் தவிர பிற மாநிலங்களில் நாளை மதியத்திற்குள் முழு முடிவுகளும் தெரிய வாய்ப்புள்ளது. உபியில் முழு முடிவுகள் வெளியாக இரவு ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.