சிம்பு வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் அபராதம்

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016ம் ஆண்டு வெளியான படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன். இந்தப் படத்தில் நடிக்க சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. இதில் சம்பள பாக்கி 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக் கோரி சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருத்திருந்தார்.

அதேசமயம், இந்த படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் இருந்து வசூலித்து தரக் கோரி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இதில் தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுக்கு ரெட் கார்ட் போட்டது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தனக்கு எதிராக அவதூறாக பேசி வருவதாக கூறி அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் சிம்பு. இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்தையும் எதிர்மனு தாரராக சேர்த்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டு 1,080 நாட்களாகியும், இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதத்தை தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்யாததால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இதனை வரும் 31ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை, ஏப்ரல் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.