பொருளாதார தடை விதிப்பதை தள்ளிப்போடுங்கள்- அமெரிக்காவுக்கு ரஷியா வேண்டுகோள்

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

மேலும் ரஷியாவின் கச்சா எண்ணெய் விற்பனை சந்தையையும் முடக்கி உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையால் ரஷியாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

ரஷியாவின் கச்சா எண்ணெய் விற்பனையை முடக்குவதன் மூலம் உலக சந்தை பெரும் பாதிப்பை சந்திக்கும். இந்த பாதிப்பு மேற்கத்திய நாடுகளிலும் எதிரொலிக்கும்.

எங்களை முடக்க நினைத்தால் நாங்கள் மாற்று வழிகளை யோசிப்போம். கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதன் விளைவுகள் என்னவாகும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ரஷியா என்ன செய்யப் போகிறது என்பதை உலகமே கவனித்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் மத்தியில் ரஷியா, தனது நலனையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

இதற்காக ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பதை தள்ளிவைக்க வேண்டும். ரஷியா மீது அமெரிக்கா நேரடி போரை நடத்துவதற்கு பதில் பொருளாதார போரை நடத்துகிறது. இதனை அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

உலக சந்தையில் ரஷியாவின் பண பரிமாற்றத்தை முடக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும்.

இது மேற்கத்திய நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்கா இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 1991-ம் ஆண்டு ரஷியாவில் ஏற்பட்ட மாற்றத்திற்கு பிறகு அங்கு பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் அந்த வீழ்ச்சியில் இருந்து ரஷியா மீண்டு வந்தது.

இந்த நேரத்தில்தான் உக்ரைன் போர் தொடங்கியது. இதன் காரணமாக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை ரஷியாவின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடைய செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனவே தான் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தள்ளிவைக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.