இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட புஜாரா முடிவு!

புதுடெல்லி,
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரரான புஜாரா இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் வருகிற சீசனில் விளையாட முடிவு செய்துள்ளார். 
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்காத நிலையில், புஜாரா இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் வருகிற சீசனில் விளையாட முடிவு செய்துள்ளார். இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறிய பிறகு அவர் இந்திய டெஸ்ட் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. சஸ்செக்ஸ் கவுண்டி அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் பணிச்சுமை காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக புஜாரா அந்த அணியில் ஒப்பந்தமாகியுள்ளார். சஸ்செக்ஸ் கிளப்பின் வெற்றிக்கு பங்களிப்பு அளிக்க ஆர்வமுடன் எதிர்நோக்கி இருப்பதாக 34 வயதான புஜாரா கூறியுள்ளார். 
இதுகுறித்து சசெக்ஸ் தனது சமூக ஊடகத்தில், “புஜாரா சீசனின் முதல் சாம்பியன்ஷிப் போட்டிக்கான சரியான நேரத்தில் வருவார் மற்றும் ராயல் ஒரு நாள் கோப்பை போட்டியின் இறுதி வரை இருப்பார்” என்று கூறியுள்ளது.
அணியில் சேர்வது குறித்து புஜாரா கூறுகையில், “வரவிருக்கும் சீசனில் வரலாற்று சிறப்புமிக்க  சஸ்செக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் விரைவில் சஸ்செக்ஸ் குடும்பத்துடன் இணைந்து அதன் பணக்கார கிரிக்கெட் வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.