அவசரமாக கூடும் காங். செயற்குழு கூட்டம் – அஜெண்டா இது தான்!

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் படு தோல்வி அடைந்ததை அடுத்து, டெல்லியில், நாளை மாலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில், அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், பஞ்சாப் மாநிலத்தில், ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.

இதே போல், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சி மாயமாகி போயுள்ளது. பாஜகவுக்கு அடுத்து தேசியக் கட்சி என்று பார்க்கப்படும் காங்கிரஸ் கட்சி, ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் தான் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளால், அக்கட்சித் தொண்டர்கள் மன வருத்தத்தில் நொந்து போயுள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில், நாளை மாலை 4 மணி அளவில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அக்கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமை வகிக்க, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கபில் சிபல், சல்மான் குர்ஷித், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட மூத்தத் தலைவர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கான காரணம், கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. மேலும் விரைவில் உட்கட்சித் தேர்தல் நடத்தி கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வரும் செப்டம்பர் மாதம் உட்கட்சித் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதை முன்கூட்டியே நடத்தவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.