கடந்த 40 ஆண்டில் இல்லாத அளவுக்கு பிஎப் வட்டி விகிதம் 8.1 % ஆக குறைப்பு

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) மீதான வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைக்க மத்திய வாரிய குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பிஎப் வட்டி விகிதத்தில் 40 ஆண்டில் இல்லாத அளவுக்கு குறைவாகும். நடுத்தர மாத சம்பளதாரர்களின் மிகப்பெரிய சேமிப்பாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) இருந்து வருகிறது. ஒன்றியத்தில் பாஜ அரசு அமைந்த பிறகு பிஎப் வட்டி விகிதம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2021-22ம் ஆண்டுக்கான பிஎப் வட்டி விகிதத்தை முடிவு செய்வதற்கான மத்திய வாரிய குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், பிஎப் வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வாரிய குழுவின் முடிவு ஒன்றிய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு அதன் ஒப்புதலுடன் இறுதி செய்யப்படும். தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 8.1 சதவீதம் என்பது, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான பிஎப் வட்டி விகிதாமாகும். கடைசியாக 1977-78ல் பிஎப் வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்துள்ளது. 2013-14 மற்றும் 2014-15ல் வட்டி விகிதம் 8.75 சதவீதமாக இருந்த நிலையில் 2018-19ல் 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டது. பின்னர், 2019-20ல் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது.ஏற்கனவே, கொரோனா பாதிப்பால் சம்பள உயர்வு உள்ளிட்ட பலன்கள் கிடைக்காத நிலையில், பிஎப் வட்டி குறைப்பால் இத்திட்டத்தில் உள்ள 5 கோடி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.* தேர்தல் வெற்றிக்கு தரப்பட்ட பரிசா?காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘நாட்டின் 84 சதவீத மக்களின் வருமானம் குறைந்து விட்டது. கோடிக்கணக்கான ஊழியர்களின் சேமிப்பில் கைவைத்தது சரியா? இதுதான் தேர்தல் வெற்றிக்காக மக்களுக்கு பாஜ தரும் பரிசா?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.