சீக்கிய ஊழியர்கள் இனி விமான நிலையங்களுக்கு கத்தி கொண்டு செல்லலாம்

புதுடெல்லி:
விமானப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் சீக்கிய ஊழியர்கள் எந்தவொரு இந்திய விமான நிலைய வளாகத்திலும் கிர்பானை எடுத்துச் செல்ல முடியாது என கடந்த 4ம் தேதி விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அலுவலகம் தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு முன்னணி சீக்கிய அமைப்பான ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 12ம் தேதி அந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது.
சிக்கியர்கள் தங்கள் மத நம்பிக்கையின்படி கிர்பான் எனப்படும் வளைந்த கத்தியை அணிந்திருப்பது வழக்கம். 
மார்ச் 4 ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில், கிர்பானை சீக்கியப் பயணிகள் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும், அந்த கத்தியின் மொத்த நீளம் 9 அங்குலத்திற்கு மிகாமலும், கூர்மையான பிளேடின் நீளம் 6 அங்குலத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, இந்தியாவிற்குள் இந்திய விமானங்களில் விமானத்தில் பயணிக்கும் போது மட்டும் கிர்பான் அனுமதிக்கப்படும் என குறிப்பிட்டது. 
“சீக்கிய பயணிகளுக்கு மட்டுமே இந்த விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் விமான நிலையத்தின் உள்நாட்டு அல்லது சர்வதேச முனையத்தில் பணிபுரியும் சீக்கியர் உட்பட அனைத்து ஊழியர்களும் கிர்பானை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்,” என்றும் கூறப்பட்டிருந்தது. 
அதன்பின்னர் மார்ச் 9ம் தேதி ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி, சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், மார்ச் 4ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சீக்கிய உரிமைகள் மீதான தாக்குதல் என்று அவர் குறிப்பிட்டார்.
இயைதடுத்து, விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அலுவலகம், முந்தைய உத்தரவில் திருத்தம் செய்து மார்ச் 12-ம் தேதி புதிய விதிமுறையை வெளியிட்டது. அதில், சீக்கிய பணியாளர்கள் விமான நிலையத்திற்கு கிர்பானை கொண்டு வரக்கூடாது என்ற பத்தியை நீக்கி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.