மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள்.. புதிய சாதனை செய்த ரொனால்டோ.. மேலும் செய்திகள்

இந்தியா-இலங்கை மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்டில் இரு அணிகளும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது இந்தியா. இதையடுத்து, விளையாடிய இலங்கை 109 ரன்களில் சுருண்டது.

143 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த ஆட்டத்தில் ரிஷப் பந்த் அரை சதம் பதிவு செய்தார். 28 பந்துகளில் அரை சதம் பதிவு செய்து சாதனை படைத்தார்.

இவர் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் பதிவு செய்து அசத்தினார்.

இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் குறைந்த பந்துகளில் அரை சதம் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு 30 பந்துகளில் கபில் தேவ் அரை சதம் பதிவு செய்திருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இந்தச் சாதனையை அவர் செய்தார். ஷர்துல் தாக்குர் 31 பந்துகள், ஷேவாக் 32 பந்துகள், ஹர்பஜன் சிங் 33 பந்துகள் ஆகியோர் டெஸ்டில் அதிவேகமாக அரை சதம் பதிவு செய்த இந்திய வீரர்கள் ஆவர்.

குத்துச்சண்டையில் தங்கம் வென்ற 6 இந்தியர்கள்

ஜோர்டானின் அம்மான் நகரில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ஏஎஸ்பிசி ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 6 இந்தியர்கள் தங்கம் வென்றனர்.

வினி (50 கிலோ), யக்ஷிகா (52 கிலோ), விதி (57 கிலோ), நிகிதா சந்த் (60 கிலோ), ஸ்ருஷ்தி சதே (63 கிலோ), ருத்ரிகா (75 கிலோ) ஆகியோர் தங்கம் வென்றனர்.

ரொனால்டோ புதிய சாதனை

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ ஹாட்ரிக் கோல் பதிவு செய்தார்.

டாட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணிக்கு எதிராக விளையாடியபோது ஹாட்ரிக் கோல் பதிவு செய்தார். அணியின் வெற்றிக்கும் வித்திட்டார். ஆட்டம் தொடங்கியது முதலே கடுமையான சவால் அளித்தது டாட்டன்.

எனினும், அணிக்கு முதல் கோலை 12ஆவது நிமிடத்தில் பதிவு செய்து அசத்தினார் நட்சத்திர வீரர் ரொனால்டோ. அதைத் தொடர்ந்து எதிரணி வீரர் ஹாரி 35 நிமிடத்தில் முதல் கோல் பதிவு செய்தார்.

பின்னர் 38ஆவது நிமிடத்தில் மீண்டும் கோல் பதிவு செய்தார் ரொனால்டோ. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 72ஆவது நிமிடத்தில் மறு கோலை பதிவு செய்தது டாட்டன் அணி.

பின்னர், பரபரப்பாக நகர்ந்த இறுதி நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை பதிவு செய்து அணியை வெற்றிப் பெற செய்தார் ரொனால்டோ.

இதன்மூலம், மொத்தமாக தனது கால்பந்து வாழ்க்கையில் 807 கோல்களை பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

ஜோசெஃப் பிகன் 805 கோல்கள் பதிவு செய்து இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அவரது சாதனையை தகர்த்துள்ளார் ரொனால்டோ.

ரொமாரியோ 772 கோல்களுடன் மூன்றாவது இடத்திலும் மெஸ்ஸி 759 கோல்களுடன் 4-ஆவது இடத்திலும் உள்ளனர். கால்பந்து லெஜண்ட் பீலே 757 கோல்களுடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறார்.

மைதானத்தில் நுழைந்து கோலியுடன் செல்பி எடுத்த ரசிகர்

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, மூன்று ரசிகர்கள் பாதுகாப்பை மீறி விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் இந்திய முன்னாள் கேப்டன் கோலியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய போது ஆறாவது ஓவரில் முகமது ஷமியின் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.

கிரிக்கெட்: இந்திய மகளிர் சாதனைகள்.. பெங்களூரு அணிக்கு இதுவரை எத்தனை கேப்டன்கள்.. மேலும் செய்திகள்

அப்போது ஸ்லிப் பகுதியில் கோலி நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த மூன்று ரசிகர்கள், தங்களது நட்சத்திர வீரரை அருகில் பார்க்கும் வாய்ப்பை உணர்ந்து, பாதுகாப்பு வேலியை உடைத்து மைதானத்திற்குள் நுழைந்தனர்.

அவர்களில் ஒரு ரசிகர் தனது மொபைல் போன் மூலம் கோலி அனுமதியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதையடுத்து விரைந்து சென்ற பாதுகாப்புப் பணியாளர்கள் ரசிகர்களை வெளியேற்றினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.