கேரள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் சிவகுமார் படம்

கேரளாவில் வருடந்தோறும் நடைபெற்று வரும் கேரள சர்வதேச திரைப்பட விழா, இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் மார்ச் 18 முதல் 25 ஆம் தேதி வரை இந்த திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. துவக்கவிழா நிகழ்வு வரும் மார்ச் 18ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த திரைப்பட விழாவில் 14 தியேட்டர்களில் சுமார் 180 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. அதுமட்டுமல்ல.. கடந்த வருடம் முதல் தற்போது வரை மறைந்த திரையுலக ஆளுமைகளுக்கு உரிய முறையில் அஞ்சலியும் செலுத்தப்பட இருக்கிறது.. அந்தவகையில் சில மாதங்களுக்கு முன் மறைந்த பிரபல இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய தமிழ் திரைப்படமான மறுபக்கம் இந்த விழாவில் திரையிடப்படுகிறது.

அவரது மலையாளப் படங்கள் பற்றி கேரள ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தமிழில் அவர் இயக்கிய தேசிய விருதுகள் பெற்ற மறுபக்கம் படத்தை பற்றி இங்குள்ள ரசிகர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த படம் திரையிடப்பட இருக்கிறது என விழாக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். 1991-ல் வெளியான இந்த படத்தில் சிவகுமார் கதாநாயகனாக நடித்திருந்தார்.. ராதா மற்றும் ஜெயபாரதி கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது..

மேலும் இந்த விழாவில் மறுபக்கம் படம் திரையிடப்படும்போது நடிகர் கமல்ஹாசனுக்கும் அதில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்படும் என்றும் விழாக்குழுவினர் கூறியுள்ளனர். கமல் நடித்த நம்மவர் படத்தை கே.எஸ்.சேதுமாதவன் தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.