முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவை உயர்த்தகோரி 6 மாவட்ட விவசாயிகள் இன்று உண்ணாவிரதம்

மதுரை:

முல்லை பெரியாறு அணையின் நீர் கொள்ளளவை 142 அடியாக உயர்த்த வேண்டும், அதற்கு முன்பாக பேபி அணையை பலப்படுத்தும் பணியை தொடங்க வேண்டும், அணையின் நிர்வாக அதிகாரங்களை தமிழக அரசு நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முல்லை பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி மதுரை பழங்காநத்தத்தில் இன்று முல்லை பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பேபி அணையை பலப் படுத்தும் வி‌ஷயத்தில் கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்காக சாலைப் பணியை தொடங்க வேண்டும்.

தமிழக பொறியாளர்கள் அணைப்பகுதியில் தங்கி பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும், தமிழன்னை படகு போக்குவரத்தை இயக்க வேண்டும். அணைக்கு மத்திய தொழில்பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க வேண்டும், அணைக்கு மும்முனை மின் இணைப்பை பெற வேண்டும்.

புதிய அணைக்கட்டு திட்ட அறிக்கையை தயார் செய்ய மத்திய அரசு கொடுத்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும், மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும், ரூல்கர்வ் முறையை அனுமதிக்கக்கூடாது, அணை நீர் சேமிப்பு பகுதியில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கார்பார்க்கிங், சொகுசு விடுதிகளை அகற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

நிர்வாகிகள் பி.ஆர். பாண்டியன், முத்துராமலிங்கம், ஆதிமூலம், உதயகுமார் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்… ரூ.5,588 கோடி முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூரில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.