3 அமைச்சர்களுடன் ஆளுநர் ரவியை சந்தித்த ஸ்டாலின்: பேசியது என்ன?

TN Governor assured to CM to send NEET exemption bill to President: நீட் விலக்கு மசோதாவை, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக, முதல்வரிடம் கவர்னர் ஆர்.என்.ரவி உறுதியளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். ஆளுநருடனான இந்தச் சந்திப்பின்போது, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியிருந்தார். இதனையடுத்து மீண்டும் மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிய நிலையில், கவர்னரை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. 

இந்த நிலையில், தமிழக கவர்னர் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக முதலமைச்சரிடம் கவர்னர் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல மாதங்களாக நிலுவையில் இருக்கும், மற்ற சட்ட முன்வடிவுகள் மீதும் நடவடிக்கை எடுக்க கவர்னரிடம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: 5 மாநில தோல்வி: சோர்ந்து கிடக்கும் எதிர்க் கட்சிகளை மீண்டும் ஒன்று திரட்டும் ஸ்டாலின்!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்புமாறு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவர்னரிடம் நேரில் வலியுறுத்தினார். நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. 

அதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்கக் கூட்டத்தில், இந்த சட்டமுன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்காக ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. 2021-2022ஆம் கல்வி ஆண்டு முடிவுக்கு வந்து, 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும் என்று தமிழக கவர்னரை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

மேலும், இதே போன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமைந்திடும் என தமிழக ஆளுநரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.