அசாமில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல- சட்டசபையில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேச்சு

கவுகாத்தி:
அசாம் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில், ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியதாவது:-
இன்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களாகவும், எம்எல்ஏக்களாகவும், சம வாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் உள்ளனர். எனவே, பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், அவர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வது அவர்களின் கடமையாகும். 
6வது அட்டவணை பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் நிலங்களை ஆக்கிரமிக்கத் தேவையில்லை.
போரா மற்றும் கலிதா (அசாம் குடும்பபெயர்கள்) வம்சத்தினர் அந்த நிலத்தில் குடியேறவில்லை என்றால், இஸ்லாமும் ரஹ்மானும் (முஸ்லீம் குடும்பப்பெயர்கள்) அந்த நிலங்களில் குடியேறுவதை தவிர்க்க வேண்டும்.
அதிகாரம் என்பது பொறுப்புடன் வருகிறது. மேலும் அசாமின் மக்கள் தொகையில் 35 சதவிகிதம் முஸ்லிம்கள் இருப்பதால், இங்குள்ள சிறுபான்மையினரைப் பாதுகாப்பது அவர்களின் கடமையாகும். 
அசாம் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தங்களின் கலாச்சாரம் மற்றும் நாகரீகம் பாதுகாக்கப்படுமா? என்ற அச்சம் உள்ளது. நல்லிணக்கம் என்பது இருவழி போக்குவரத்து. முஸ்லிம்கள் சங்கரி கலாச்சாரம், சத்திரிய கலாச்சார பாதுகாப்பு பற்றி பேசட்டும்… நல்லிணக்கம் இருக்கும். பத்து வருடங்களுக்கு முன்பு நாம் சிறுபான்மையினராக இல்லை. ஆனால் இப்போது இருக்கிறோம்.
காஷ்மீரி பண்டிட்களுக்கு நேர்ந்த கதியை அசாமியர்களும் சந்திப்பார்களா என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நமது அச்சத்தைப் போக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமை. முஸ்லிம்கள் பெரும்பான்மையினரைப் போல நடந்துகொண்டு, காஷ்மீரில் நடந்தது இங்கு மீண்டும் நடக்காது என உறுதியளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.