இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்!| Dinamalar

புதுடில்லி: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி,பாங்காங் ஏரி பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. பின்னர் ஜூன் 15ல் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 42 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் நிருபர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, இந்தியா – சீனா உறவில், சமீபத்திய ஆண்டுகளில் பின்னடைவை சந்தித்துள்ளது. பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை தூண்ட சில சக்திகள் முற்படுகின்றன எனக்கூறியிருந்தார்.

நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த முனிச் பாதுகாப்பு மாநாட்டின் போது, இந்தியா சீனா இடையிலான உறவு மிகவும் கடினமான கால கட்டத்தில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இம்மாத இறுதியில் வாங் யீ, இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கல்வானில் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர், சீனாவில் இருந்து இந்தியா வரும் முதலாவது மூத்த தலைவர் இவர் ஆவார். இந்தியா வருவதற்கு முன்னர், வாங் யீ, நேபாளம் செல்ல உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.