உக்ரைன் போர்: கொரோனா,போலியோ, காலரா தொற்று அதிகரிக்கலாம்.! மருத்துவர்கள் எச்சரிக்கை

கீவ்,
உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். பலர் தங்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
ரஷியாவின் கொடூர செயலை கண்டித்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன.

மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் நிலைமையை மோசமாக்கியுள்ளன. மேலும் மருத்துவப் பொருட்கள் கிடைப்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மருந்தகங்களும் மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான மருந்துகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைனில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் தாக்குதல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ அமைப்பினர் மழைநீரையும் பனியையும் சேகரித்து நகர மக்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்குகின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷியப் படையெடுப்பால் ​​கொரானா தொற்று மட்டுமல்லாது, போலியோ, காலரா மற்றும் தட்டம்மை போன்ற பிற தொற்று நோய்களும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுக்குறித்து மருத்துவர்களுக்கான அவசர திட்ட மேலாளரான கேட் வைட் கூறுகையில், “உக்ரைனில் ஏற்கனவே கொரானாவுக்கு எதிராக குறைந்த தடுப்பூசி விகிதங்கள் உள்ளன. உக்ரைன் மற்ற ஐரோப்பிய நாடுகளில் அல்லது அமெரிக்காவை போல அதிக எண்ணிக்கையில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறும் அளவுக்கு மக்கள் தடுப்பூசி போடவில்லை. மேலும் போரின் காரணமாக உக்ரைனின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலை நோய்த்தடுப்பு எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்” என்று கூறினார்.
மேலும் மக்கள் குண்டுவீச்சிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அடித்தளங்கள், சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் கூடியிருப்பதால், இந்த இடங்களில் சுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் சரியாக கிடைக்காத காரணத்தினால் போலியோ, காலரா மற்றும் தட்டம்மை போன்ற வயிற்றுப்போக்கு நோய்கள் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.