நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஏப்.8 மாலை நேரில் ஆஜராகும்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை ஒத்தக்கடை அருகே காளிகாப்பன், வீரபாஞ்சான் பகுதியில் வருவாய் ஆவணங்களில் பேட்டை மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலை என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலத்தை 38 பேர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க மதுரை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்துள்ளார்.

சாலை, மயானம் என வகைப்படுத்தப்பட்ட இடங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு அதே இடத்தில் பட்டா வழங்க முடியாது. அந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு வேறு இடத்தில் தான் பட்டா வழங்க முடியும். இருப்பினும் வருவாய் ஆவணங்களில் சாலையாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலத்தை நத்தமாக வகைப்படுத்தி பட்டா வழங்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு வகைப்படுத்த ஆட்சியருக்கு அதிகாரம் கிடையாது. எனவே ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு 2021 அக்டோபர் 4-ல் உயர் நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரத்தில் அதே நிலை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அதே இடத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் முன்தேதியிட்டு பட்டா வழங்க உத்தரவிட்டு, அந்த இடத்தை வகை மாற்றம் செய்து அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி முத்துகிருஷ்ணன் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், கே.முரளிசங்கர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஏப்.8 மாலை நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.