ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா எதிர்ப்பு

வாஷிங்டன்:
உக்ரைன்- ரஷியா போரால் உலகம் முழுவதும் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். மேலும், ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக நிறுத்த இருப்பதாக பிரிட்டனும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது கச்சா எண்ணெய் விலையில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
ரஷியாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்து வருவதால், நெருக்கடியை சமாளிக்க மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷியா முன் வந்துள்ளது. 
இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்க முடிவு செய்து உள்ளது. இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கருதிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
முதல் கட்டமாக 35 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே விரைவில் கையெழுத்தாக உள்ளது. ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை சந்தை மதிப்பை விட பீப்பாய்க்கு 20 முதல் 25 டாலர் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஷியாவிடம் இருந்து மலிவான விலையில் எண்ணெய் வாங்குவது இந்தியாவை வரலாற்றின் தவறான பக்கத்தில் நிலைநிறுத்தும் என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. 
இதுபற்றி வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், ‘அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை பிற நாடுகள் கடைப்பிடிக்கவேண்டும். ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கினால் அது அமெரிக்காவின் தடைகளை மீறும் நடவடிக்கை அல்ல என்றாலும், இந்தியா எந்த பக்கம் நிற்க விரும்புகிறது? என்பது பற்றி சிந்திக்க தோன்றும். ரஷியாவிடம் இருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவை வரலாற்றின் தவறான பக்கத்தில் நிலைநிறுத்தும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.