பாராளுமன்றத்தில் இந்தியில் பதிலளித்த மத்திய மந்திரிக்கு கனிமொழி எம்.பி. எதிர்ப்பு

சென்னை:

பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது தி.மு.க. எம்.பி.யும், மக்களவை குழு துணைத்தலைவருமான
கனிமொழி
பேசியதாவது:-

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில் ஒரே நாடு ஒரே ரே‌ஷன் திட்டத்தின்கீழ் புலம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களுக்கான செலவை மாநில அரசு ஏற்க வேண்டுமா? ஒன்றிய அரசு ஏற்க வேண்டுமா? பொது விநியோகத் திட்டம் என்பது மாநில அரசின் கீழ் வருவது.

அதனால் இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.

இதற்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை மந்திரி பியூஸ் கோயல் பதிலளிக்க எழுந்து இந்தியில் பேச தொடங்கினார்.

அப்போது
கனிமொழி
எம்.பி. குறுக்கிட்டு, “நான் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டேன். மந்திரிக்கு ஆங்கிலம் மிக நன்றாகத் தெரியும். ஆங்கிலத்திலேயே பதில் சொல்லுங்கள். இந்தியில் எதற்கு சொல்கிறீர்கள்?” என்று வலியுறுத்தினார்.

அதற்கு மத்திய மந்திரி பியூஸ் கோயல், “மொழி பெயர்ப்பு வசதி இருக்கிறதே” என்று கூறினார்.

ஆனால் விடாத
கனிமொழி
எம்.பி., “கேள்வி கேட்ட எனக்கு உங்கள் பதில் புரியும் வகையில் ஆங்கிலத்திலேயே பதில் கூறுங்களேன்” என்று மீண்டும் வலியுறுத்தினார்.

இதையடுத்து மத்திய மந்திரி பியூஸ் கோயல் “சகோதரி கனிமொழியை நான் மதிக்கிறேன். அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆங்கிலத்திலேயே பதில் அளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு “புலம் பெயர்ந்த மக்களின் ரே‌ஷன் பொருட்களுக்கான செலவை 100 சதவீதம் மத்திய அரசே ஏற்கும்” என்று ஆங்கிலத்தில் தெரிவித்தார்.

இந்தியில் பேச தொடங்கிய மத்திய மந்திரியை ஆங்கிலத்தில் பதிலளிக்க வைத்த கனிமொழி எம்.பி.யை பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டினார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.