பெட்ரோல் போல எரியும் கிணற்று தண்ணீர்: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம: கேரள மாநிலம் பாலக்காட்டில் 10க்கும் மேற்பட்ட வீடுகள், நிறுவன கிணறுகளில் உள்ள தண்ணீர் பெட்ரோல் போல தீப்பிடித்து எரிவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு அருகே திருத்தாலா பகுதியில் உள்ளது கூற்றநாடு கிராமம். இங்குள்ள பெரும்பாலான வீடுகள், கடைகளில் கிணறுகள் உள்ளன. இந்த தண்ணீரைத் தான் இவர்கள் குடிநீர் உள்பட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள சில வீடுகள், சிபிஎம் கட்சி அலுவலகம் உள்பட சில நிறுவன கிணறுகளில் உள்ள தண்ணீரில் பெட்ரோல் வாசனை அடித்தது.  இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதியினர், வாளியில் தண்ணீரை பிடித்து தீயைக் கொளுத்தி போட்டபோது கண்ணிமைக்கும் நேரத்தில் தண்ணீரில் மளமளவென தீ பிடித்தது. பெட்ரோலில் தீ எரிவது போல தண்ணீரில் தீ பிடித்ததை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதேபோல் கிணற்றில் தீயை கொளுத்திப் போட்டாலும் அதேபோல தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. கூற்றநாடு பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளிலும் இதே நிலைதான் காணப்பட்டது. இது குறித்து சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தீ பிடிப்பதற்கான காரணம் என்னவென்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தீ பிடிப்பதற்கு உதவும் ஏதோ ஒரு பொருள் தண்ணீரில் இருப்பதாக மட்டுமே அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த தண்ணீரை குடித்தால் ஏதாவது உடல் நலக் கோளாறு ஏற்படுமோ? என்ற அச்சம் இருப்பதால் அந்த பகுதியினர் கடந்த சில மாதங்களாக கிணற்று தண்ணீரை பயன்படுத்துவதில்லை. இந்த வீடுகளுக்கு அருகே ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. அங்கிருந்து பெட்ரோலோ, டீசலோ கசிந்து கிணற்றுத் தண்ணீரில் கலந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.