கடலூர் | காதலனுடன் இருந்த இளம்பெண்ணை ஆபாசப் படமெடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்கள் கைது

கடலூர்: கடலூரில் இரவில் காதலனுடன் இருந்த இளம்பெண்ணை ஆபாசப் படமெடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பு தந்த தகவல்: கடலூர் அருகே உள்ள நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண், ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இவரும் கடலூர், குண்டு உப்பலவாடி பெரியசாமி நகரை சேர்ந்தவர் முருகன் மகன் சரவணன் (23) என்பவரும் கடந்த இரண்டு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு (மார்ச்.28) கடையில் வேலை முடித்துவிட்டு அந்த இளம்பெண் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சரவணன் தனது மோட்டார் சைக்கிளில் அந்தப் பெண்ணை ஏற்றிக்கொண்டு கடலூர் கம்மியம்பேட்டை இணைப்பு சாலையில் உள்ள ஓர் இடத்திற்கு அழைத்து சென்று இருவரும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.

இருவரும் அங்கு தனிமையில் இருந்தபோது, அந்த வழியாக வந்த கடலூர் திருப்பாதிரிபுலியூர் குப்பன்குளம், சிஎம்சி காலனியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் சபரி என்கிற கிஷோர் (19), மேலும் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஷாஜகான் மகன் ஆரிப் (18) ஆகியோர், தங்களது நண்பனான குப்பன் குளத்தைச் சேர்ந்த நாகப்பன் மகன் சதீஷ் (19) என்பவரிடமும் தகவல் கூறி வரவழித்துள்ளனர். இந்த 3 பேரும் சேர்ந்து சரவணனையும் அந்த இளம்பெண்ணையும் மிரட்டி, சரவணன் வைத்திருந்த செல்போனைப் பிடுங்கி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். இதையடுத்து சதீஷும், ஆரிப்பும் சரவணனை இறுக்கிப் பிடித்துக் கொண்டனர். கிஷோர் அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மூன்று பேரும் சரவணனையும் அந்த இளம் பெண்ணையும் அங்கிருந்து விரட்டி விட்டுள்ளனர். சரவணன் அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளை ஏற்றி சென்று கடலூர் செம்மண்டலம் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட ரோந்து அலுவலர் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், ஓர் இளம்பெண் தனியாக சாலையில் நிற்பதை பார்த்து கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியிடம் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியும், டிஎஸ்பியும் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி உள்ளார். அப்போது அந்த இளம்பெண் நடந்த சம்பவம் குறித்து அவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி நள்ளிரவு 1 மணிக்கு அந்த இளம்பெண்ணை கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு, இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி இன்று (மார்ச்.29) காலை சதீஷ், ஆரிப், சபரி என்கிற கிஷோர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். எஸ்.பி. சக்திகணேசன் காவல்நிலையம் சென்று 3 பேரிடம் விசாரணை நடத்தனார். மேலும் இந்தச் சம்பவம் குறித்து அந்த 3 பேரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.