புதுடில்லி :மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு டில்லியில் ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் இருந்து, அவரது மகன் சிராக் பஸ்வான் அரசு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டார்.
பீஹாரை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக 2020ல் உயிரிழந்தார். அவருக்கு 12, ஜன்பத் சாலையில் ஒதுக்கப்பட்டு இருந்த அரசு பங்களாவை, அவரது மகனும், லோக்சபா எம்.பி.,
யுமான சிராக் பஸ்வான் காலி செய்யாமல் இருந்தார்.
பங்களாவின் முன் பகுதியில் ராம்விலாஸ் பஸ்வானுக்கு சிலை அமைத்து, அந்த கட்டடத்தை நினைவகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து பங்களாவை காலி செய்யுமாறு சிராக் பஸ்வானுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு, ‘நோட்டீஸ்’ அனுப்பியது.அப்போதும் அவர் பங்களாவை காலி செய்யவில்லை. அதை லோக் ஜனசக்தி கட்சியின் டில்லி அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். இதையடுத்து, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சக அதிகாரிகள் பங்களாவுக்கு சென்றனர். அங்கிருந்து ராம்விலாஸ் பஸ்வானின் உடைமைகளை அப்புறப்படுத்தி, சிராக் பஸ்வானை வெளியேற்றினர்.
Advertisement