மோகன்லால் இயக்குனராக மாறியது ஏன் ; கமல் பட இயக்குனர் தகவல்

மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாரோஸ் என்கிற படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்தார். இடையில் கொரோனா தாக்கம் காரணமாகவும் தான் நடித்து வரும் படங்களின் பிஸி ஷெட்யூல் காரணமாகவும் இடைவெளி விட்டுவிட்டு அந்த படத்தை இயக்கி வந்தவர், தற்போது முழுமூச்சுடன் அதன் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மோகன்லால் இயக்குனராக மாறியதன் பின்னணி என்ன என்பது குறித்து பிரபல மலையாள இயக்குனர் டீகே ராஜ்குமார் என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தற்போது மோகன்லால் இயக்கிவரும் பாரோஸ் படத்திற்கு கதை எழுதியவர், 35 வருடங்களுக்கு முன்பு 3டியில் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ பொன்னூஸ் என்பவர்தான். மைடியர் குட்டிச்சாத்தான் படத்திற்கு பிறகு அவர் திரையுலகை விட்டு ஒதுங்கி கிஷ்கிந்தா தீம் பார்க் அமைப்பது தொடர்பாக வியாபார ரீதியாக தனது கவனத்தை திருப்பி விட்டார். அதன்பிறகு இடையில் அவரை சந்தித்த டீகே ராஜீவ்குமார், அவரை மீண்டும் சினிமாவுக்கு வருமாறு வற்புறுத்த அந்த சமயத்தில் தான் பாரோஸ் என்கிற கதையை தான் உருவாக்கி இருப்பதாக கூறி உள்ளார் ஜிஜோ பொன்னூஸ்.

அவர் சொன்ன கதை டீ.கே.ராஜீஜ்குமாருக்கு ரொம்பவே பிடித்துவிட, ஒருமுறை சித்திக்கின் படப்பிடிப்பில் இருந்த மோகன்லாலை சந்தித்தபோது பேச்சுவாக்கில் இதுபற்றி கூறியுள்ளார். அதன்பிறகு ஜிஜோ பொன்னூஸுடன் மோகன்லாலின் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார். அப்போது ஜிஜோ பொன்னூஸிடம் பேசிய மோகன்லால் அவர் மீண்டும் டைரக்சனுக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார்.. அப்போதைக்கு அவரிடம் சரி என்று சொன்னாலும், ஒருகட்டத்தில் மோகன்லாலை அழைத்த ஜிஜோ பொன்னூஸ், தான் மீண்டும் வேறு பெரிய புராஜக்ட்டில் இறங்கி வியாபார ரீதியாக முன்னோக்கி செல்ல இருப்பதாகவும், அதனால் இந்த படத்தை ஏன் நீங்கள் டைரக்ட் செய்யக்கூடாது, நீங்கள் தான் சரியான நபர்.. நீங்கள் டைரக்ஷனில் இறங்குவதற்கு இதுதான் சரியான சமயம் என்றும் கூறியுள்ளார்.

மோகன்லாலுக்கு ஏற்கனவே இந்த படத்தின் கதை பிடித்திருந்ததால் உடனடியாக அதற்கு சம்மதித்து செயலிலும் இறங்கி விட்டார். எப்படியோ மோகன்லால் இயக்குனராக மாறுவதற்கு நான் ஒரு வகையில் காரணம் ஆகிவிட்டேன் என கூறி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார் இயக்குனர் டீகே ராஜீவ்குமார். இவர் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் கமல் நடித்த சாணக்யன் என்கிற படத்தை இயக்கியவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூட கமல் நடிப்பில் சபாஷ் நாயுடு படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகி சில நாட்கள் அந்த படத்தில் பணியாற்றிய நிலையில் உடல் நிலை சரியில்லை என அதிலிருந்து ஒதுங்கி கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.