7 பேர் விடுதலை விவகாரம்: தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த மனுவில், “இந்திய அரசியல் சாசனம் 161-வது பிரிவின் கீழ் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது.

கடந்த அதிமுக அமைச்சரவையில் ஏழுபேர் விடுதலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநர் 42 மாதங்களாக இந்த தீர்மானத்தை நிலுவையில் வைத்திருப்பது சட்டத்துக்கு விரோதமானது. எனவே, ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திராமல் அமைச்சரவை தீர்மானத்தின் படி என்னை விடுவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நளினி

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ” தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் என்ன உத்தரவைப் பிறப்பிக்க முடியும்?

ஏழுவர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது 7 பேரின் வழக்குகளும் அனுப்பப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு விளக்கமளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.