விடுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள்.. பாதுகாப்பு வழங்கக்கோரி பாரதியார் பல்கலை., மாணவிகள் போராட்டம்..!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவியர் விடுதிக்குள் மர்ம நபர்கள் புகுந்ததாக புகார் தெரிவித்து பல்கலைக்கழக மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருதமலை சாலையில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைகழக வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதி கட்டிடத்தின் வராண்டா பகுதி வரை ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வந்ததாகவும், கடந்த இரு வாரங்களில் பல முறை இவ்வாறு வந்ததாகவும் , சமீபத்தில் வந்த கும்பலில் ஒருவன் ஆடைகளின்றி நிர்வாணமாக சுற்றித் திரிந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்த மாணவிகள், பல்கலைக்கழக துணை வேந்தர் நேரில் வந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து பல்கலைக்கழக நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய துணை வேந்தர், மாணவிகளின் விடுதிக்கு வெளியே ஆண் காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், விடுதிக்குள் பெண் காவலர்களை நியமிக்கவும், பழுதாகி கிடக்கும் கண்காணிப்பு கேமிரா அமைப்பை சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.