கல்லூரி விழாவில் நடனமாடிய பெண் கலெக்டர்

திருவனந்தபுரம்: கல்லூரி கலை விழாவில் நடனமாடிய மாணவ, மாணவிகளுடன் பத்தனம்திட்டா மாவட்ட பெண் கலெக்டர் திவ்யா எஸ். ஐயரும் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டராக இருப்பவர் டாக்டர் திவ்யா எஸ். ஐயர். இவர் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சபரிநாதனின் மனைவி ஆவார். இந்நிலையில் பத்தனம்திட்டாவிலுள்ள கத்தோலிக்க கல்லூரியில் மகாத்மா காந்தி பல்கலைக்கழக கலைவிழா நடந்தது. இந்தக் கலை விழாவை தொடங்கி வைப்பதற்காக மாவட்ட கலெக்டர் திவ்யா எஸ். ஐயர் வந்திருந்தார். விழாவின் தொடக்கமாக மாணவ, மாணவிகள் சினிமா பாடலின் பின்னணியில் ஒரு விழிப்புணர்வு நடனமாடினர். அதை கலெக்டர் திவ்யா ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மேடையிலிருந்து கீழே இறங்கி வந்த அவர், மாணவ மாணவிகளுடன் சேர்ந்து நடனம் ஆடினார். இதனால் மாணவர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர். சிறிது நேரம் அவர்களுடன் சேர்ந்து கலெக்டர் திவ்யா நடனம் ஆடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கலெக்டர் திவ்யா பள்ளி பருவத்திலிருந்தே பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் நடனமாடி ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.