`டேட்டிங் ஆப்… வீடியோ' – ஓரினச்சேர்க்கையாளர்களை மிரட்டிப் பணம் பறித்த கோவை கல்லூரி மாணவர்கள் கைது!

கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த் (19), நிஷாந்த் (22). இருவரும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மாணிக்கம் என்ற ஓர் நண்பரும் இருக்கிறார். இவர்கள் மூன்று பேரும் இணைந்து ஓரினச்சேர்க்கைக்கு பிரபலமான ஓர் டேட்டிங் ஆப்பை பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

ஓரினச்சேர்க்கை

இந்த ஆப்பின் மூலம் கணபதி பகுதியைச் சேர்ந்த கங்காதரன் (34) என்பவருடன் பிரசாந்த் பழகியுள்ளார். கங்காதரன் டாஸ்மாக் பாரில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, உறவு வைத்துக் கொள்வதற்காக கங்காதரனை பிரசாந்த் அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நள்ளிரவு சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ரயில்வே ட்ராக்கில் சந்தித்துள்ளனர். இவர்கள் தனிமையில் இருந்ததை, அங்கு மறைந்திருந்த நிஷாந்த், மாணிக்கம் ஆகியோர் வீடியோவாக எடுத்துள்ளனர்.

கோவை

பிறகு கங்காதரனை கத்தி முனையில் மிரட்டி, ரூ.2,500 பணம், மொபைல் போனை பறித்துள்ளனர். மேலும், “நாங்கள் எப்போதெல்லாம் பணம் கேட்கிறோமா கொடுக்க வேண்டும். காவல்துறையிடம் புகாரளித்தால் வீடியோவை சமூகவலைதளத்தில் விட்டுவிடுவோம்” என மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து, கங்காதரன் சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் புகாரளித்தார். வழக்கு பதிவு செய்த போலீஸார் பிரசாந்த், நிஷாந்த் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணிக்கத்தை தேடி வருகின்றனர். இதே கும்பல் அபிராம் என்ற மற்றொரு இளைஞரிடம் இதே ஆப் மூலம் பழகி, வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர்.

மிரட்டல்

அவரிடம் இருந்து ஒரு ஐபோன், ரூ.5,000 பணம் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து பிரசாந்த், நிஷாந்தின் மொபைல் போன்களை பறிமுதல் செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.